Tuesday, June 24, 2008

யார் அந்த அந்நியர்கள்?



ஏகத்துவத்துவ கொள்கையை சுமந்து செல்லும் மனிதர்கள் பலவகைகளில் சோதிக்கப்படுவார்கள். பொறுமையும், ஈமானுமே அவர்களை எல்லாக் துயரங்களின் மத்தியிலும் இயங்க வைத்துக்கொண்டிருக்கும். அனைத்து விதமான சோதனைகளுக்கு பின்னும் எமது முன்னைய சமுதாயங்களுக்கு வெற்றி எப்படி கிட்டியதோ, அதேபோல் ஏகத்துவத்தை சுமப்பவர்களுக்கு வெற்றி கிட்டும். சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நபிமார்களும், அவர்களைப் பின்பற்றியோரும் பிற்காலத்தில் பெருந்தலைவர்களாக மாறிய வரலாறுகள் இதனையே எமக்கு உறுதியாக இயம்புகின்றன.

அல்லாஹ்(சுபு)வின் தீனிலிருந்து விலகி, உலகம் வழிகேட்டின்பால் அதீத வேகத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வழிகெட்ட மனிதர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக மதிக்கப்பட்டும், நேர்வழியிலுள்ளோர் வழிகேடர்களாக நோக்கப்பட்டும், பொய்யர்களின் கூற்று உண்மைப்படுத்தப்பட்டும், உண்மையாளர்களின் கூற்று இலகுவில் பொய்யாக்கப்பட்டும் விடுகின்றன. இத்தகைய புதுமையான யுகத்தில் தம் முன்னால் காணும் முரண்பாடுகளைப்பார்த்து புத்திஜீவிகளும் குழம்பிப்போயுள்ளனர்.

அல்லாஹ்(சுபு)வின் தீன் இந்த உலகில் நடைமுறையிலில்லாத ஒரு பொழுதில் அந்த தீனை முழுமையாக நடைமுறைப்படுத்தவென தோன்றும் சில புதுமையான மனிதர்கள் தமது குடும்பங்களினாலும், நண்பர்களினாலும், சமூகத்தினாலும் அந்நியர்களைப்போன்று நோக்கப்படுவார்கள். சோதனைகளும், கஷ்டங்களும் அவர்களை பலவழிகளில் தாக்குவதுடன் அவர்களின் வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டு விடுகின்றன. தமது சமூகத்தின் பார்வையில் இந்தக் கூட்டத்தினர் அந்நியர்களாக நோக்கப்பட்டாலும், அல்லாஹ்(சுபு)வின் பார்வையில் இவர்கள்தான் வெற்றியாளர்கள்.

இந்த அந்நியர்கள் யார்?

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹ் முஸ்லிமில் பதிவாகியுள்ள கீழ்வரும் ஹதீத் இந்தக் அந்நியர்கள் யார் என்பதை தெளிவுபடுத்துகிறது.

“இஸ்லாம் அந்நியமான ஒன்றாகவே ஆரம்பித்தது. அது மீண்டும் அந்நியமானதாக மாறிவிடும். ஆகவே அந்த அந்நியர்களுக்கு (அதாவது இஸ்லாத்தை அந்நியமான ஒன்றாக மக்கள் பார்க்கும்போது இஸ்லாத்தை சுமப்பவர்கள்) சுபசோபனம் உண்டாகட்டும்”

இந்த உலகிற்கு இஸ்லாம் முதன்முதலில் தோன்றிய போது மக்காவிலுள்ள காபிர்கள் இஸ்லாத்தின் செய்தியை மக்களுக்கு எடுத்துச்சொன்ன அழைப்பாளர்களுடன் கடுமையாக நடந்து கொண்டனர். இந்தச் செய்தி உண்மையானது எனத்தெரிந்து கொண்டும் அது அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றிவிடும் என்ற காரணத்தினால் அதை ஏற்க மறுத்து விட்டனர்.

நபி(ஸல்) அவர்களுக்கும் ஸஹாபாக்களுக்கும் மக்காவில் நடந்த கொடுமைகள் ஒன்றும் புதிதல்ல. எந்தவொரு புதிய செய்தியும் நடைமுறையிலுள்ள வாழ்க்கை முறைக்கு சவால் விடும்போது அந்த செய்தியை மேலோங்கச்செய்ய முனைவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள்தான் அவை. அந்தக் கொடுமைகள் மூலம் முஹம்மது(ஸல்) அவர்களின் செய்தியில் விட்டுக்கொடுப்புக்களை ஏற்படுத்தக் கூறி அவர்கள் வற்புறுத்தினர். ஆனால் ஒருபோதும் நபி(ஸல்0 அவர்களும், அவர்களது தோழர்களும் அதைச் செய்யவில்லை.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“ஒரு காலத்தில் தலைவர்கள் தோன்றுவார்கள். நீங்கள் அவர்களைப் பின்பற்றினால் அவர்கள் உங்களை வழிகேட்டின்பால் அழைத்துச் செல்வார்கள். அவர்களை நீங்கள் பின்பற்றாவிட்டால் அவர்கள் உங்களை கொன்று விடுவார்கள்.”அப்பொழுது “அந்த நிலையில் நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ நீங்கள் ஈஸா(அலை) அவர்களின் தோழர்கள்போல் பொறுமையாக இருங்கள். அவர்கள் அங்கு வாள்களால் அறுக்கப்பட்டார்கள், சிலுவைகளில் அரையப்பட்டார்கள். எவன் கையில் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக, அல்லாஹ்(சுபு)வின் பாதையில் உயிர் துறப்பது அவனுக்கு அடிபணியாமல் வாழ்வதைவிட மேலானதாகும்” என்று கூறினார்கள்.

இந்நிலையே இஸ்லாமிய அழைப்பாளர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. எந்தக் கஷ்டத்தின் மத்தியிலும் அவர்கள் இஸ்;லாத்தின் செய்தியை சமரசமின்;றி முன்னெடுத்துச் செல்வார்கள். அவர்கள்படும் ஒவ்வொரு கஷ்டமும் அல்லாஹ்(சுபு)வுடனான அவர்களது தொடர்பை அதிகரிக்கச் செய்வதுடன் அவர்கள் தமது கொள்கை மீது கொண்டிருக்கும் உறுதியும் அதிகரித்துவிடும்.

இஸ்லாத்தை வாழ்க்கை முறையாக இந்த உலகிற்கு வழங்கும் ஒர் முக்கிய இலக்குடன் முஸ்லிம்கள் வாழ வேண்டும். அராஜகங்கள் இந்த உலகில் அரங்கேறிக்கொண்ருப்பதையும், அரசாங்கங்களே அதற்கு ஆதரவளிப்பதையும் நம் கண் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று உலகமெங்கும் தாருள் குப்ராகவே இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் குப்ரின் ஆதிக்கமே நிலவுகிறது. இந்த நவீன ஜாஹிலியத்தை அகற்றி உலகிற்கு ஒளிர்வூட்டக்கூடிய இஸ்லாமிய முறைமையை அல்லது கிலாபத்தை ஏற்படுத்த நாம் முனைப்புடன் ஈடுபடவேண்டும். அந்த பணியினை மேற்கொள்ளும்போது எம்மை சமூகம் அந்நியர்களாக பார்க்கக்கூடும். எனினும் இஸ்லாம் எமது ஈமானாலும், பொறுமையாலும், தைரியத்தினாலும் அல்லாஹ்(சுபு)வின் உதவி கொண்டு வெற்றி பெறும்போது இன்றைய அந்நியர்களாகிய நாம்தான் நாளைய தலைவர்கள் இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment