Sunday, February 14, 2010

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - பகுதி 05 (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

அகீதாவை பொருத்தவரை கம்யூனிஸ(communism)  சித்தாந்தத்தின் கருத்து யாதெனில், அனைத்து பொருட்களுக்கும் உயிரினங்களுக்கும் மூலம் இயற்பொருள்தான் (Matter), இயற்பொருளின் பரிணாம வளர்ச்சி மூலமாக அனைத்துப் பொருட்களும், உயிரினங்களும் தோன்றி இருக்கின்றன என்பதாகும். முதலாளித்துவ சித்தாந்தத்தின் கருத்து யாதெனில்: மனிதர்களின் உலகியல் வாழ்க்கை விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிப்பதாகும். இதன் விளைவாக அரசுக்கும் மதத்திற்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது. ஆகவே, முதலாளித்துவாதிகள், படைப்பாளன் பற்றிய கருத்தை விவாதிக்க முன்வருவதில்லை. மேலும் அவர்களின் விவாதம் என்னவென்றால், படைப்பாளனுக்கு மனிதர்களின் விவகாரங்களில் தலையிடுவதற்கு எந்தவித உரிமையும் இல்லை, அவனுடைய உள்ளமையை (Existence)  ஏற்றுக் கொண்டாலும் அல்லது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரியே என்பதுதான். முடிவாக, படைப்பாளனின் உள்ளமையை ஏற்றுக்கொண்டவர்களும் அதை மறுப்பவர்களும் முதலாளித்துவ சித்தாந்தத்தில் சமமானவர்களே. அதுதான் மதசார்பின்மை (Secularism) என்ற வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிப்பது என்பதாகும்.



இஸ்லாம், அல்லாஹ்(சுபு)வின் உள்ளமையையும், அவன்தான் படைப்பாளன் என்பதையும் நம்புகிறது. மனித இனத்தின்பால் அவனுடைய தூதர்களையும் தீர்க்கத்தரிசிகளையும் அவனுடைய தீனுடன் அவன்(சுபு) அனுப்புகிறான். மேலும், மனிதர்கள் தங்கள் செயல்களுக்காக நியாயத்தீர்ப்பு நாளில் கேள்வி கணக்கிற்கு உட்படுவார்கள். ஆகவே இஸ்லாத்தின் அகீதா என்பது அல்லாஹ்(சுபு)மீதும், வானவர்கள் மீதும், அவனது வேதங்கள் மீதும், அவனுடைய தூதர்கள் மீதும், இறுதிநாளின் மீதும், களாகத்ர் மீதும், நன்மைதீமை இவை இரண்டும் அல்லாஹ்(சுபு)விடமிருந்துதான் வருகிறது என்பதன் மீதும் நம்பிக்கை கொள்வதாகும்.




எனினும், அகீதாவிலிருந்து (அடிப்படைக்கொள்கை) வழிமுறை (முறைமை) பிறக்கும் முறையைப் பொருத்தவரை கம்யூனிஸமானது, உற்பத்திக்குரிய கருவிகளிலிருந்து வழிமுறை உருவாகிறது என்கிறது. எனவே, பிரபுத்துவ சமூகத்தில் ஆதிக்கம் பெற்ற உற்பத்தி முறையினால் (கோடாரி) (Axe) விளைந்த பலன்தான் (Product) பிரபுத்துவ முறைமையாகும். சமூகம் முதலாளித்துவ சமூகமாக பரிணாம வளர்ச்சி அடையும்போது இயந்திரங்களை உற்பத்திக் கருவியாக அது மாற்றியது. எனவே, இயற்பொருள்வாத பரிணாம வளர்ச்சி (Meterialistic Evolution)  யின் மூலம் மேற்கண்ட உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ வழிமுறை (முறைமை) உருவாகியது. வாழ்வியலிலிருந்து மதத்தை பிரித்ததன் காரணமாக வாழ்க்கை வழிமுறைகளை மனிதனே உருவாக்கிக் கொள்ள வேண்டும என முதலாளித்துவம் கோருகிறது. எனவே, மனிதன் அவனது எதார்த்த நிலையிலிருந்து அவனது வழிமுறையை எடுத்துக் கொள்ள ஆரம்பித்து அதை அவனே விதிமுறை செய்து கொண்டான். எனினும் வாழ்க்கையின் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு அல்லாஹ்(சுபு) மனிதனுக்கு ஒரு வழிமுறையை நிர்ணயித்து இருக்கிறான் என்று இஸ்லாம் கருதுகிறது. அவன்(சுபு) இந்த வழிமுறையுடன் முஹம்மது(ஸல்) அவர்களை அனுப்பியிருக்கிறான். மனிதர்கள் அதை பின்பற்ற வேண்டும் என்பதற்காக அல்லாஹ்(சுபு) தனது அருள் வெளிப்பாடு (Revealation) மூலம் அவருக்கு(ஸல்) அதை அருளியிருக்கிறான். ஆகவே, ஒரு முஸ்லிம் தனது பிரச்சினையை ஆய்வு செய்து அதற்குரிய தீர்வை குர்ஆனிலிருந்து சுன்னாவிலிருந்தும் முடிவு செய்து கொள்கிறான்.




எமது செயல்பாட்டின் அளவுகோளாக இயற்பொருள் வாதத்தை (Meterialism), அதாவது இயற்பொருள்வாத வழிமுறைகளை இந்த உலக வாழ்வியலின் அளவுகோளாக கம்ய+னிஸம் கருதுகிறது. ஆகவே, இயற்பொருள் பரிணமிப்பது போல அளவுகோளும் பரிணமிக்கும் என அது குறிப்பிடுகிறது. அதேபோல முதலாளித்துவம் செயல்களுக்கான அளவுகோளாக உலகப் பயன்களை கருதுகிறது. இதனடிப்படையில், செயல்பாடுகளின் மதிப்பீடுகள் வரையப்பட்டு செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இஸ்லாமோ, செயல்பாடுகளின் அளவுகோளாக ஹராம், ஹலாலை கருதுகிறது. அதாவது அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் பற்றிய கட்டளைகளை செயல்பாட்டின் அளவுகோளாக இஸ்லாம் கருதுகிறது. இதனடிப்படையில் ஹலாலான செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஹராமான செயல்கள் விலக்கப்படுகின்றன. இஸ்லாத்தில் அளவுகோள் பரிணமிப்பதுமில்லை, மாற்றமடைவதுமில்லை, உலக பயன்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவதுமில்லை. மாறாக, ஷரிஆவே அவற்றை தீர்மானிக்கின்றது.




சமூகம் தொடர்பான கண்ணோட்டத்தைப் பொருத்தவரை இயற்பொருளாக கருதப்படும் உற்பத்தி முறை, இயற்கை, மனிதன் ஆகியவை அடங்கிய பொதுவான ஒரு தொகுப்பே சமூகம் என்று கம்யூனிஸம் (communism)  கருதுகிறது. இயற்கையும் அதில் அடங்கியிருப்பவைகளும் பரிணமிக்கும் போது மனிதனும் அதனோடு சேர்ந்து பரிணமிக்கின்றான். இவ்வாறு முழு சமூகமும் பரிணமிக்கின்றது என்கிறது. இறுதியாக சமூகம் இயற்பொருள்வாத பரிணாம வளர்ச்சியை (Meterialistic Evolution)  பின்பற்றுகிறது. ஆகவே பரிணாம வளர்ச்சியின் செயற்பாங்கை (Process) ஊக்குவிப்பதற்கு முரண்பாடுகளை உருவாக்க வேண்டும். சமூகம் பரிணமிக்கும் போது தனிமனிதனும் அதோடு சேர்ந்து பரிணமிக்கின்றான். இவ்வாறு மனிதன் ஒரு சக்கரத்தில் அதன் ஆரம் சுழல்வதைப் போல சமூகத்தோடு சேர்ந்து சுழன்ற வண்ணம் இருக்கின்றான் என்கிறது.




முதலாளித்துவம், தனிமனிதர்களின் தொகுப்புதான் சமூகம் என்று கருதுகிறது. ஆகவே, தனிமனிதர்களின் விவகாரங்கள் மேலாண்மை செய்யப்பட்டு விட்டால், சமூகத்தின் விவகாரங்கள் மேலாண்மை செய்யப்பட்டுவிடும் என்று அது கருதுகிறது. ஆகவே, முதலாளித்துவ சமூகத்தில் தனிமனிதன் மீது மட்டும்தான் கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அரசு தனிமனித நலனுக்காக மட்டுமே செயலாற்றுகிறது. இதன் முடிவாக, இந்த சித்தாந்தம் சுயநல போக்கு கொண்டதாக திகழ்கிறது.




இஸ்லாத்தைப்பொருத்தவரை சமூகத்தின் அடித்தளமாக அகீதா இருப்பதாக இஸ்லாம் கருதுகிறது. அதில் அதன் சிந்தனைகள், உணர்ச்சிகள் (Mashaair)  மற்றும் அதிலிருந்து பிறக்கும் சமுதாய வழிமுறைகள் (முறைமைகள்) (System of life)  ஆகியவைகள் அடங்கும். ஆகவே இஸ்லாமிய சிந்தனைகளும் இஸ்லாமிய உணர்ச்சிகளும் மிகைக்கும் போதும் அதன் மீது இஸ்லாமிய ஆட்சிமுறை செயல்படுத்தப்படும்போதும் இஸ்லாமிய சமூகம் உருவாகின்றது. ஆகவே சமூகம் என்பது மனிதன், சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் சமூக வழிமுறைகள் (முறைமைகள்) ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கிறது. ஒரு நபர் மற்றொரு நபருடன் இணைந்து செயல்படும்போது ஒரு குழுவாக மாத்திரமே இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் ஒரே விதமாக சிந்தனை மேற்கொள்ளாதவரை, ஒரே விதமான உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்ளாதவரை, ஒரே விதமான ஆட்சி அமைப்புக்கு கீழ் வராதவரை ஒரு சமூகமாக அவர்கள் ஆக மாட்டார்கள். இது ஏனெனில், தத்தமது நலனே (Maslaha)  இரு மனிதர்களுக்கிடையில் உறவை ஏற்படுத்தும் காரணியாக இருக்கின்றது. எனவே, தமது நலன்கள் குறித்த அவர்களின் சிந்தனைகளும், அதனுடன் கூடிய உணர்ச்சியும் ஒத்த அடிப்படையில் இருக்கும்போதே அவர்களுக்கு மத்தியில் உறவு நிலைக்கின்றது. இதன்விளைவாக அவர்களின் ஏற்பும் (Acceptance - Ridah  மறுப்பும் (Rejection - Ghadah)  ஒரே விதமாகவும், அவர்களின் வாழ்வியல் விவகாரங்களை தீர்க்கும் வழிமுறையும் ஒரே விதமாகவும் இருக்கும். தமது நலன் தொடர்பான சிந்தனைகளும் உணர்ச்சிகளும் மாறுபாடாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் ஏற்பும் மறுப்பும் ஒன்றுபடாது. அல்லது அவர்களின் சமூக வழிமுறைகள் வேறுபாடாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்குள் உறவு என்பது இல்லாது போய்விடும். பிறகு சமூகம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது.




ஆகவே சமூகம் என்பது மனிதன், சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் வழிமுறைகள் (systems) ஆகியவற்றை உள்ளடக்கியது. ஏனெனில் இந்த விஷயங்கள்தான் மக்களிடையே உறவை ஏற்படுத்துவதற்கும். அவர்கள் ஒரு தனித்தன்மை வாய்ந்த சமூகமாக விளங்குவதற்கும் காரணமாக இருப்பவைகள்.




இவ்வாறாக ஒரு சமூகத்தின்; அனைத்து மக்களும் முஸ்லிம்களாக இருக்கும் நிலையில், அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள சிந்தனைகள் ஜனநாயகமாகவும், முதலாளித்துவமாகவும் இருந்து, அவர்களுடைய உணர்ச்சிகள் புரோகித தன்மையுடன் கூடிய ஆன்மீகமாகவும் அல்லது தேசப்பற்றாகவும் அல்லது தேசிய வாதமாகவும் இருந்து அவர்கள் மீது அமைந்துள்ள ஆட்சிமுறை முதலாளித்துவ ஜனநாயகமாகவும் இருக்கும்பட்சத்தில் அந்த சமூகத்திலுள்ள மக்கள் அனைவரும் முஸ்லிமாக இருந்தபோதிலும் அல்லது அவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிமாக இருந்த போதிலும் அந்த சமூகம் இஸ்லாமிய சமூகமாக கருதப்படமாட்டாது.





ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்துவது குறித்து கம்யூனிஸம் (communism) கருதுவது என்னவென்றால், கடுமையான சட்டங்கள் மூலமாகவும், காவல்துறையின் ஆற்றல் மூலமாகவும் அரசு மட்டுமே அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைத்தான். அதன் அரசானது, ஆட்சி அமைப்பை உருவாக்கி சமூகத்தின் சார்பாகவும், தனிமனிதன் சார்பாகவும் அவற்றை செயல்படுத்தும். முதலாளித்துவத்திலோ அரசானது சுதந்திர உரிமைகளை (விடுதலையை) பாதுகாக்கும். ஒரு மனிதனின் சுதந்திரத்தின் மீது மற்றொரு மனிதன் வரம்பு மீறினால் அரசு அதில் தலையிட்டு அதை தடுத்துவிடும். எனினும், ஒரு நபர், மற்றொரு நபரின் சுதந்திரத்தில் தலையிடாமல் அவரை சுயநலத்திற்காக பயன்படுத்தினாலும், அவரது சம்மதத்தோடு அவரது உரிமையை எடுத்துக் கொண்டாலும் அரசு அதில் தலையீடு செய்யாது. ஏனெனில் அவரது சுதந்திரத்தில் வரம்பு மீறியதாக அச்செயல் கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில் இங்கு சுதந்திர உரிமைகளை பாதுகாப்பதற்குத்தான் அரசு செயல்படுகிறது.





தனிமனிதனின் இறையச்ச உணர்வின் அடிப்படையில் (முறைமைகள்) ஆட்சிமுறை நடைமுறைப்படுத்துவதாக இஸ்லாம் கருதுகிறது. மேலும் நீதி நிர்வாகம் குறித்த சமூகத்தின் உணர்வின் அடிப்படையிலும், ஆட்சியாளரோடு இஸ்லாமிய உம்மா வழங்கும் ஒத்துழைப்போடும், நன்மையை ஏவி தீமையை தடுப்பதின் மூலமும், அரசினாலும் அரசு அதிகாரத்தின் மூலமாகவும் ஆட்சிமுறை நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதன்படி சமூகத்தின் விவகாரங்களை அரசு கவனித்துக் கொள்ளும் அதேசமயம் தனிமனிதர் தன்னுடைய விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் ஆற்றல் பெறாதவரை அரசு அந்த விவகாரங்களில் கவனம் செலுத்தாது. இங்கு ஆட்சி அமைப்பு ஒருபோதும் பரிணமிப்புக்கு உட்படாது. எனினும் ஒரு விவகாரத்தில் இஜ்திஹாத் மூலம் பல அபிப்ராயங்கள் இருக்கும்பட்சத்தில், எதை சட்டமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தீர்மானிப்பதில் அரசுக்கு அதிகாரம் இருக்கிறது.





இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமை மனிதனின் இயல்போடு ஒத்துப்போவதாக இருக்கிறது. ஆழமான சிந்தனைகளைக் கொண்டதாக அது இருந்த போதிலும் எளிதாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. ஒருவருடைய அறிவும் உள்ளமும் அதற்காக துரிதமாக திறந்து விடுகிறது. ஆவலோடு அதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. மேலும் அதன் விளக்கமான கருத்துக்களை ஆழ்ந்து சிந்தித்து பாராட்டுகிறது. இது ஏனெனில் மனிதனிடம் இயல்பாகவே சன்மார்க்க உள் உணர்வு (Religious Instinct) அமைந்திருப்பதுதான்;. ஒவ்வொரு மனிதனும் தன் இயல்பினால் ஒரு மதவாதியாகவே இருக்கின்றான். ஏனெனில் அவனிடம் மத உணர்வு ஆழமாக இடம்பெற்றிருக்கின்றது. எந்த சக்தியாலும் இந்த இயற்கை தன்மையிலிருந்து அவனை பிரிக்க முடியாது. தன்னுடைய இயல்பான இயற்கை தன்மையின் காரணமாக மனிதன் தான் முழுமையற்றவன் என்பதையும் வணங்கி வழிபட வேண்டிய மகத்தான ஆற்றலுடைய ஒன்று இருக்கிறது என்பதையும் மனிதன் உண்மையாக உணர்கின்றான். மனிதனின் சன்மார்க்க உள்உணர்வு என்பது, அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் ஒரு படைப்பாளன் அவனுக்கு தேவைப்படுவதை உணர்த்தக் கூடியதாகவே இருக்கிறது. மேலும் மனிதனின் இயல்பான பலவீனத்திலிருந்து தோன்றும் இந்த சன்மார்க்க உள்உணர்வு மனிதனிடம் நிலையாக இடம் பெற்றிருக்கக் கூடியது. அது மனிதனிடம் குறிப்பிட்ட சில வழிகளில் வெளிப்படுகிறது. அதுதான் மனிதனின் வணங்கி வழிபடும் தன்மையாகும் (ஸஜ்தா செய்யும் தன்மை taqdees). முடிவாக, மனித இனம் மதவாத தன்மையுடன் வரலாற்றின் நெடிய பாதை முழுவதிலும் ஏதாவது ஒன்றை வணங்கி வழிபட்டே வந்திருக்கிறது. மனித சமூகம், விண்கோள், கற்கள், விலங்குகள், நெருப்பு ஆகியவற்றையும் இன்னும் பலவற்றையும் வணங்கி வழிபட்டுக்கொண்டே வந்திருக்கிறது. எனினும், இஸ்லாம் தனது உன்னத கோட்பாட்டின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மனிதனை படைக்கப்பட்ட பொருட்களை வணங்கும் இழிநிலையிலிருந்து மீட்டு அனைத்தையும் படைத்த அல்லாஹ்(சுபு)வை வணங்குவதற்கு வழிகாட்டுகிறது. அல்லாஹ்(சுபு)வையும் அவனுடன்(சுபு) நமக்குள்ள உறவையும் மறுத்தலிக்கும் இயற்பொருள்வாத சித்தாந்தம் (Meterialistic Ideology) தோன்றிய பிறகும் மனிதனின் இந்த உள்ளார்ந்த மதவாத தன்மையினை மாற்றியமைக்க இயலவில்லை. மாறாக அதிகாரம் தொடர்பான மனிதனின் எண்ணக்கருவை இது மாற்றியமைத்து மனிதன் தன்னை விட தனது ஆற்றலை பெரிதாகக்கருதும் அளவுக்கும் அதனை வணங்கி வழிபடும் அளவுக்கும் இந்த சிpத்தாந்தம் வழிவகுத்துவிட்டது. மேலும் அது இந்த ஆற்றலை மனிதனுக்குள் உருவாக்குவதிலும், அதற்கு மட்டுமே அவன் வழிபடச் செய்வதிலும் அனைத்தையும் மாற்றியமைத்தது. பின்நோக்கி செல்வது போல் ஒரு நிலை ஏற்பட்டு மனிதர்கள் அல்லாஹ்(சுபு)வை வணங்குவதற்கு பதிலாக அவனது(சுபு) அடியார்களை (மனிதர்களை) வணங்கினார்கள். அவனது(சுபு) வசனங்களை கனம் செய்வதற்கு பதிலாக படைப்பினங்களின் வார்த்தைகளை கனம் செய்தார்கள். இந்த வகையில் இது ஒரு பிற்போக்கேயாகும். இந்த நிராகரிப்பு கொள்கையினால் மனிதனின் சன்மார்க்க உள்உணர்வை அவனிடமிருந்து நீக்க முடியவில்லை. மாறாக, ஏமாற்றும் விதத்தில் அவனை பின்நோக்கி செல்லும்படி ஆக்கிவிட்டது. ஆகவே, இயற்பொருள்வாத சித்தாந்தத்தின் கம்யூனிஸம் (communism)  அறிவார்ந்த தலைமை எதிர்மறையானதாகும் (Negative). மனிதனின் இயற்கை தன்மைக்கு முரண்பட்டதாகும் (Controdictive). எனவே இந்த கண்ணோட்டத்தில் இது ஒரு தோல்வியே ஆகும். மனிதர்களை தங்களின் இறைப்பை தேவையை நிறைவு செய்யும் காரியத்தின் பக்கம் மட்டும் சிறப்பாக கவனம் செலுத்தும்படி அது அவர்களுக்கு வழிகாட்டியது. ஏழைகளையும், ஆதரவற்றவர்களையும், வாழ்வில் தோல்வியடைந்தவர்களையும் அது சிறப்பாக கவர்ந்தது. சிந்தனைத்தரம் குறைந்தவர்களும், வாழ்க்கையை கோட்டை விட்டவர்களும், வாழ்க்கையை வெறுத்தவர்களும், இயல்பான மனநிலையிலிருந்து மாறி தம்மை ஞானிகள்; என்று அழைக்கப்படுவதை விரும்பியவர்களும் இதை பின்பற்றினார்கள். அவர்கள் இந்த இயற்பொருள்வாத தத்துவத்தை பிரசங்கிக்கும் போதே அதன் தவறான அடிப்படையும், சமூகத்தில் அது ஏற்படுத்தும் சேதமும், உண்மையாகவும் தெளிவாகவும் வெளிப்படுகிறது. மனிதர்களை இந்த சித்தாந்த்திற்கு அடிமைப்படுத்தவும், கட்டாயப்படுத்தவும் அது முயற்சிக்கிறது. ஆகவே, அடக்குமுறை, அநீதி, வன்முறை, குழப்பம் மற்றும் நிலையற்ற தன்மை ஆகியவை அதன் முக்கிய சாதனங்களாக இருக்கின்றன.




முதலாளித்துவ அறிவார்ந்த தலைமையும் மனிதனின் இயற்கை தன்மைக்கு அதாவது சன்மார்க்க உள்உணர்வுக்கு முரண்பாடாகவே இருக்கிறது. இது ஏனெனில் சன்மார்க்க உள்உணர்வு மனிதனின் வணங்கி வழிபடும் உணர்விலும், வாழ்க்கை விவகாரங்களை மேலாண்மை செய்வதிலும் வெளிப்படுகிறது. இந்த மேலாண்மையை மனிதன் கையில் எடுக்கும் நிலையானது இந்த சித்தாந்த வழிமுறையின் பொருந்தாத தன்மையும் அதன் வழிமுறையின் ஆற்றல் இன்மைக்கு சாட்சியளிக்கின்றன. முடிவாக, மதம் என்பது மனிதர்களின் வாழ்வியல் விவகாரங்களை சரியான முறையில் மேலாண்மை செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். ஆகவே, மனித வாழ்க்கை விவகாரங்களிலிருந்து மதத்தைப் பிரிப்பது என்பது மனிதர்களின் இயற்கை தன்மைக்கு முரண்பாடாக இருக்கிறது. மனித வாழ்க்கையில் மதம் இடம் பெற்றிருப்பது என்பதன் பொருள். வாழ்க்கையின் செயல்பாடுகள் வெறும் மத சடங்குகளாக இருப்பது என்பதல்ல. மாறாக, மதம் இடம் பெற்றிருப்பதன் பொருள் அல்லாஹ்(சுபு) விதித்த விதிமுறைகளைக் கொண்டு மனிதனின் வாழ்வியல் விவகாரங்கள் தீர்க்கப்படுவதுதான். மனிதனின் இயற்கை தன்மையோடு பொருந்திப் போகின்ற அகீதாவிலிருந்து இந்த வழிமுறை பிறக்கின்றது. இந்த வழிமுறையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வேறொரு (கோட்பாட்டிலிருந்து) அகீதாவிலிருந்து பிறந்த வழிமுறையைக் கொண்டு வந்தால் அது மனித இயல்புக்கு பொருந்திப் போவதாக இருக்காது. ஆகவே, முதலாளித்துவத்தின் அறிவார்ந்த தலைமை மனித உள் உணர்வு அடிப்படையில் தோல்வியுற்ற ஒன்றாகவே இருக்கிறது. ஏனெனில், அது எதிர்மறையானதாக இருக்கிறது. மனித வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை அது பிரிக்கிறது. மனித வாழ்வில் இயல்பாக உள்ள மத உணர்வினை போக்கி விடுகிறது. மேலும் அதை தனிமனித விவகாரம் என்று கூறுவதோடு, அல்லாஹ்(சுபு) மனித வாழ்க்கை பிரச்சினைகளுக்கு தீர்வாக விதித்துள்ள வழிமுறையை போக்கிவிடுகிறது.






இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை உடன்பாடானது. ஏனெனில், அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை பற்றிய நம்பிக்கைக்கு அறிவை அது அடிப்படையாக அமைத்திருக்கிறது. மனிதனின் கவனத்தை மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் என்பவற்றின் மீது திருப்பி படைப்பாளனான அல்லாஹ்(சுபு)வின் உள்ளமையை உறுதியாகவும், தீர்மானமாகவும் நிலைநிறுத்துகிறது. மனிதன் உச்சமான நிறைவை (Utmost Perfection)  தனக்குள்ளே தேடுகின்றான். ஆனால் அது அவனிடத்திலோ அல்லது அவனுடைய வாழ்விலோ அல்லது பிரபஞ்சத்திலோ காணப்படாத நிலையில், இஸ்லாம் அதைப்பற்றி அவனுக்கு விளக்கக் கூறுகிறது. அந்த உச்சமான நிறைவை பெற்றுள்ள ஆற்றலை (அல்லாஹ்(சுபு)வை) அவன் அறிவு ரீதியாக உணர்ந்து கொள்வதற்கும, அதன் (அல்லாஹ்(சுபு)வை) உள்ளமை மீதும், அதன் (அல்லாஹ்(சுபு)வை) மீதும் நம்பிக்கை கொள்வதற்கும் வழிகாட்டுகிறது.





கம்ய+னிஸத்தின் அறிவார்ந்த தலைமை இயற்பொருள்வாத கோட்பாட்டின்மீது நிறுவப்பட்டிருக்கிறதே ஒழிய, அறிவார்ந்த அடிப்படையில் மனித அறிவின் தீர்மானத்தின் மீது நிறுவப்படவில்லை. அது சிந்தனைக்கு (Thought)  முன்பாகவே இயற்பொருள் இருந்து வருவதாக கருதுகிறது. மேலும் அனைத்திற்கும் மூலமாக இயற்பொருள் இருக்கிறது என்று கருதுவதனால் இயற்பொருள்வாத (Meterialistic) அடிப்படையில் அது இருக்கிறது. இவ்வாறிருக்க, பல நூற்றாண்டுகளாக அறிஞர்களுக்கும், கிருஸ்தவ மத குருமார்களுக்கும் மத்தியில் நடந்து வந்த ரத்தம் சிந்தும் போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் கொண்டு வரப்பட்ட சமரச பேரத்தின் அடிப்படையில் முதலாளித்துவ அறிவார்ந்த தலைமை அமைக்கப்பட்டது. இந்த சமரசத் தீர்வுதான் மனித வாழ்வியல் நடைமுறை விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிக்கும் சிந்தனையாகும்.




ஆகவே, கம்ய+னிஸம், முதலாளித்துவம் ஆகிய இரண்டின் அறிவார்ந்த தலைமையும் தோற்றுப்போய் விட்டன. ஏனெனில் அவை மனிதனின் இயல்புக்கு முரண்பட்டதாக இருப்பதோடு அவை மனித அறிவின் மீது நிறுவப்பட்டவைகள் அல்ல.





முடிவாக, இந்த மூன்று அறிவார்ந்த தலைமைகளில் இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை மட்டும்தான் சரியானது. ஏனெனில் இது மனித அறிவின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. மனிதனின் இயற்கை தன்மையோடு ஒத்துப் போவதாக இருக்கிறது. அதனால் அதற்கு உடன்பாடான முறையில் பதிலளிப்பவனாக மனிதன் இருக்கின்றான். அதே வேளையில் மற்ற அறிவார்ந்த தலைமை தவறானதாக இருக்கின்றன. ஏனெனில் அவைகள் மனித அறிவின் மீது கட்டமைக்கப்படவுமில்லை. அவை மனித இயல்புக்கு பொருந்துவதும் இல்லை. அதாவது கம்ய+னிஸ அறிவார்ந்த தலைமை இயற்பொருள்வாத கோட்பாட்டின் மீது கட்டமைப்பட்டிருக்கிறதே தவிர அறிவின் மீது கட்டமைக்கப்படவில்லை. இது ஏனெனில் சிந்தனைக்கு முந்தியதாக இயற்பொருள் இருக்கிறது என்று அது கருதுகிறது. அதாவது அறிவுக்கு முந்தியதாக இயற்பொருள் இருக்கிறது என்று கருதுகிறது. மனிதனின் சிந்தனை (Thought) ) குறித்த இதன் கருத்து என்னவெனில், இயற்பொருள் மூளையில் (brain) பிரதிபலிக்கப்படும்போது சிந்தனை தொடங்குகிறது. ஆகவே தன்னுள் பிரதிபலிக்கப்படும் இயற்பொருளைப் பற்றி மூளை சிந்திக்கிறது. மூளையில் இயற்பொருள் பிரதிபலிக்கப்படுவதற்கு முன்பாக எந்த சிந்தனையும் அதில் இருப்பதில்லை. இதனடிப்படையில், அனைத்தும் இயற்பொருள் மீதுதான் கட்டமைக்கப்படுகின்றன. ஆகவே கம்ய+னியஸத்தின் அறிவார்ந்த தலைமை பிறந்த மூலம் இயற்பொருளே தவிர சிந்தனை (Thought)  அல்ல.





கம்ய+னிஸத்தின் இந்த கருத்துக் கண்ணோட்டம் இருவகையில் தவறானதாகும். முதலாவதாக, இயற்பொருளுக்கும் மனித மூளைக்கும் இடையில் எந்தவிதமான பிரதிபலிப்பும் நடைபெறுவதில்லை. இயற்பொருளில் மூளை பிரதிபலிப்பு அடைவதுமில்லை. மூளையில் இயற்பொருள் பிரதிபலிப்பு அடைவதுமில்லை. ஏனெனில் பிரதிபலிப்பு ஏற்பட வேண்டுமெனில் கண்ணாடியைப் போல பிரதிபலிக்கும் தன்மையுள்ள ஒரு பொருள் அங்கு அவசியமாகிறது. இந்த பிரதிபலிக்கும் தன்மையினை மூளையும் பெற்றிருக்கவில்லை. இயற்பொருளும் பெற்றிருக்கவில்லை. ஆகவே, மூளைக்கும் இயற்பொருளுக்கும் மத்தியில் எந்தவிதமான பிரதிபலிப்பும் ஏற்படுவதேயில்லை. ஏனெனில் இயற்பொருள் மூளைக்கு எடுத்துச் செல்லப்படுவதுமில்லை. மூளையில் பிரதிபலிப்புக்கு உள்ளாவதுமில்லை. மாறாக, புலன்களில் ஏற்படும் புலன் உணர்வு (Sensation),  புலன்கள் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே மூளைக்கு எடுத்துச் செல்லப்படும் இயற்பொருளின் புலன் உணர்வு, மூளையில் ஏற்படும் இயற்பொருளின் பிரதிபலிப்பும் அல்ல, இயற்பொருளில் ஏற்படும் மூளையின் பிரதிபளிப்பும் அல்ல, மாறாக அது இயற்பொருளினால் ஏற்படும் புலன் உணர்வே ஆகும் (Sensation). இந்த வகையில் பார்வைக்கும் மற்ற புலன் உணர்வுகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. எனவே, பார்ப்பதைப் போலவே நுகர்தல், கேட்டல், தொடுதல், சுவைத்தல் ஆகியவற்றின் மூலம் புலன் உணர்வுகள் ஏற்படுகின்றன. ஆகவே, நிகழ்வது என்னவென்றால் புலன் உணர்வே ஒழிய பிரதிபலிப்பு அல்ல. இதனடிப்படையில் மனிதன் தன் ஐம்புலன்களினால் புலன் உணர்வுகளை பெறுகிறானே தவிர பொருட்கள் மூளையில் பிரதிபலிப்பு அடைவதில்லை.





இரண்டாவதாக, புலன் உணர்வு மட்டுமே சிந்தனை ஏற்படுவதற்கு போதுமானதாக இருக்காது. மாறாக அது புலன் உணர்வை மட்டுமே ஏற்படுத்தும். அதாவது தொட்டுணரும் உண்மை பொருளின் (Tangible Objects)  புலன் உணர்வை மட்டுமே அது ஏற்படுத்தும். புலன் உணர்வுகள் பல சேர்ந்து பல இலட்சம் புலன் உணர்வுகள் ஏற்பட்ட போதிலும் அது சிந்தனையை ஒருபோதும் ஏற்படுத்தவே செய்யாது. அது வெறும் புலன் உணர்வாக மட்டுமே இருக்கும். எனவே மனிதன் சிந்திக்க வேண்டுமெனில், முந்தய தகவல்களை அவன் மூளையில் கொண்டிருத்தல் வேண்டும். இதன் மூலமாக அவன் புலன் உணர்வால் அறிந்த பொருட்களை விளங்கிக் கொள்ளலாம். உதாரணமாக, சிரியாக் மொழியைப் (Syriac language)  பற்றி முந்தய தகவல்கள் ஏதும் அறியாத ஒருவரிடம் சிரியாக் மொழியிலுள்ள ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டு, தொடுதல், பார்த்தல் ஆகிய அவருடைய அனைத்து புலன்களும் அந்த புத்தகத்தின் மீது படிந்தாலும், பல இலட்சம் முறை இந்த செயல் திரும்ப திரும்ப நிகழ்ந்தாலும் கூட சிரியாக் மொழி சம்பந்தமான தகவல்கள் அவருக்கு கொடுக்கப்பட்டால் ஒழிய ஒரு வார்த்தையைக் கூட அந்த புத்தகத்திலிருந்து அவரால் விளங்கிக் கொள்ள இயலாது. இதன் பிறகு அந்த தகவல் அவருக்கு கொடுக்கப்பட்டால் சிந்திக்கவும் விளங்கிக் கொள்ளவும் அவரால் இயலும். நாம் மற்றொரு உதாரணத்தை இங்கு காண்போம். வலிமையான புலன் ஆற்றலைக் கொண்டு ஒரு குழந்தை இருக்கிறது. அதனிடம் முந்தைய தகவல்கள் ஏதும் இல்லை. அந்த குழந்தையின் முன் ஒரு சிறு துண்டு தங்கம், ஒரு சிறு துண்டு பித்தளை, ஒரு சிறு கல் ஆகியவற்றை வைத்து, அந்த குழந்தையின் அனைத்து புலன்களும் அவற்றின் மீது முழுமையாக படிந்தாலும், பல்வேறு கோணங்களில் இந்த செயல் திரும்ப திரும்ப நிகழ்த்தப்பட்டாலும், அந்த குழந்தையால் அவற்றை அறிந்து கொள்ள இயலாது. எனினும், இந்த பொருட்களைப் பற்றிய முந்தய தகவல்கள் அந்தக் குழந்தையிடம் இருக்குமானால் அதைக் கொண்டு இந்த பொருட்களை அது அறிந்து கொள்ளும். இருபது ஆண்டுகள் அந்த குழந்தை வளர்ந்து வாலிபம் எய்தினாலும், அதன் மூளையில் சிறப்பான உயிரியல் வளர்ச்சி (Biological growth)  ஏற்பட்டு இருந்தாலும் கூட, முந்தய தகவல்கள் இல்லாத பட்சத்தில் தான் பிறந்த முதல் நாளில் காணப்பட்ட நிலையிலேயேதான் இருக்கும். ஏனெனில், மனிதன் ஒன்றை அறிந்து கொள்வதற்கு மூளை மட்டும் போதாது. மாறாக, மூளையில் இருக்கும் முந்தய தகவல்களோடு, பொருட்களின் புலன் உணர்வும் சேர்ந்து மூளையோடு இணைய வேண்டும். அப்போதுதான் சிந்தனை ஏற்பட்டு ஒன்றை விளங்கிக் கொள்ள முடியும்.





உள்ளார்ந்த உணர்வு (Instinctual Behaviour)  தொடர்பான நடத்தைகளைப் பொருத்தவரை மனிதனின் அறிவுத்திறன் செயல்பாங்கிற்கு (Intellectual Process)  முற்றிலும் நேர்மாறானது. இத்தகைய நடத்தைகள் உள்ளார்ந்த உணர்வு அல்லது உடல் சார்ந்த தேவை ஆகியவற்றின் தூண்டுதலால் ஏற்படுகின்றன. உதாரணமாக, ஒரு ஆப்பிள் பழத்தையும், ஒரு சிறு கல்லையும் ஒரு குழந்தையிடம் பலமுறை கொடுப்பதின் மூலம் ஆப்பிள் உண்ணக் கூடியது என்றும் கல் உண்ண முடியாதது என்றும் அந்த குழந்தை அறிந்து கொள்கிறது. அதுபோலவே ஒரு கழுதை பார்லி அரிசி உண்ணக்கூடியது என்றும் மண் உண்ண முடியாதது என்றும் அறிந்து கொள்கிறது. இந்த வேறுபடுத்தும் திறன் சிந்தனையின் காரணமாகவோ அறிவுத்திறன் காரணமாகவோ ஏற்படுவதில்லை. மாறாக, உள்ளார்ந்த உணர்வு (Instinct)  மூலமாகவோ, உடல் சார்ந்த தேவை உணர்வு (Organic Needs)  மூலமாகவோ ஏற்படுகிறது. இத்தகைய விஷயங்கள் மனிதரிலும், விலங்குகளிலும் காணப்படுகின்றன. எனவே, பொருட்களின் புலன் உணர்வு மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள முந்தய தகவல்களோடு அது இணையாமல் சிந்தனை (Thought)  உருவாக முடியாது.




இதனடிப்படையில், அறிவு, அறிவுத்திறன், அறிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றின் பொருள் என்னவெனில், புலன்கள் மூலமாக பொருட்களின் புலன் உணர்வு மூளைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள முந்தய தகவல்களோடு இணைந்து மூளையில் நடைபெறும் செயல்பாங்கினால் (Process) பொருட்களின் உண்மை நிலை விளங்கிக் கொள்ளப்படுகிறது என்பதே.


ஆகவே, கம்ய+னிஸ்டுகளின் அறிவார்ந்த தலைமை தவறானதும் குறையுடையதுமாகும். ஏனெனில் அது அறிவின் மீது கட்டமைக்கப்படவில்லை. மேலும், அறிவைப் பற்றியும் சிந்தனையை பற்றியும் அது கூறும் விளக்கம் தவறானதாகும்.



முதலாளித்துவத்தின் அறிவார்ந்த தலைமையைப் பொருத்தவரை, பல நூற்றாண்டுகளாக கிருஸ்தவ புரோகிதர்களுக்கும், ஐரோப்பிய அறிவு ஜீவிகளுக்கும் இடையில் நடைபெற்று வந்த ரத்தம் சிந்தும் போராட்டத்திற்கு தீர்வாக ஏற்படுத்தப்பட்ட சமரச பேரத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதாகும். இந்த சமரச பேரம்தான் மனித வாழ்விலிருந்து மதத்தை பிரிப்பது என்பதாகும். அதாவது, மறைமுகமாக மதத்தை ஏற்றுக் கொண்டு பின்பு அதை வாழ்வியலிலிருந்து பிரித்து விடுவது. எனவே, முதலாளித்துவத்தின் அறிவார்ந்த தலைமை அறிவின் மீது நிறுவப்பட்டதல்ல. மாறாக ஒரு சமரசத்தீர்வின் அடித்தளத்தில் நிறுவப்பட்டது. உண்மையாக, முதலாளித்துவவாதிகளிடம் சமரச எண்ணம் ஆழமாக இடம் பெற்றிருக்கிறது. அவர்கள் அசத்தியத்தை சத்தியத்திற்கு நெருக்கமாகவும், நிராகரிப்பை விசுவாசத்திற்கு நெருக்கமாகவும், காரிருளை பிரகாசத்திற்கு நெருக்கமாகவும் கொண்டு வந்தார்கள். இந்த சமரசபேரம் ஒருபோதும் நிலைபெறாது என்பது உண்மையாகும். ஏனெனில் ஒரு விஷயம் ஒன்றேல் உண்மையாக (Haqq)  இருக்க வேண்டும் அல்லது பொய்யாக (Baatil) இருக்க வேண்டும். விசுவாசமாக (Iman) இருக்க வேண்டும் அல்லது நிராகரிப்பாக (Kufr) இருக்க வேண்டும். பிரகாசமாக (டுiபாவ) இருக்க வேண்டும் அல்லது இருளாக இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் அடிப்படை கோட்பாட்டையும் (Aqeedah) அறிவார்ந்த தலைமையையும் கட்டமைத்துள்ள சமரசம் என்ற அடிப்படை அவர்களை சத்தியத்தை விட்டும், விசுவாசத்தை விட்டும், பிரகாசத்தை விட்டும் திசைமாறி செல்லுமாறு ஆக்கிவிட்டது. ஆகவே அவர்களுடைய அறிவார்ந்த தலைமை அறிவின் மீது கட்டமைக்கப்படவில்லை என்பதால் அது தவறானதாகும்.



இஸ்லாமிய அடிப்படை கோட்பாடு அறிவின் மீது நிறுவப்பட்டுள்ளது. ஏனெனில் அது முஸ்லிம்களுக்கு அல்லாஹ்(சுபு)வின் உள்ளமையையும், முஹம்மது(ஸல்) அவர்கள் தூதுவத்தையும், அருள்மறை குர்ஆனையும் அறிவை பயன்படுத்தி சிந்தித்து நம்பிக்கை கொள்ளுமாறு கட்டளையிடுகிறது. மேலும் அறிவார்ந்த முறையிலும், திட்டவட்டமான முறையில் இருக்கின்ற குர்ஆன், முத்தவாதிர் ஹதீஸ் போன்ற நம்பத்தகுந்த மூல ஆதாரங்களிலிருந்து உறுதியாக நிறுவப்பட்டவைகளையும் நம்ப வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் புலன் அறிவுக்கும் அப்பாற்பட்ட மறைவானவற்றை (Ghaib) நம்ப வேண்டும் எனவும் கட்டளையிடுகிறது. ஆகவே, இஸ்லாமிய அடிப்படை கோட்பாடு அறிவின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.




அறிவார்ந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் உள்ளதாக இந்த கோட்பாடு இருக்கிறது. மேலும், மனிதனின் இயற்கை தன்மையை (Fitra) பொருத்தவரையிலும், இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை அவனுடைய இயல்புக்கு ஒத்துப் போவதாக இருக்கிறது. ஏனெனில் அது சன்மார்க்கத்தையும், மனித வாழ்க்கையில் அதன் தேவை அவசியம் என்பதையும் ஏற்றுக் கொள்கிறது. மேலும் அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக வாழ்வியல் விவகாரங்களை மேலாண்மை செய்ய வேண்டும் என்பதையும் அது ஏற்றுக் கொள்கிறது. மத உள்உணர்வு மனிதனிடம் இயற்கையாக உள்ளார்ந்த வகையில் அமைந்திருக்கிறது. ஏனெனில், மனிதனிடம் அமைந்துள்ள உள்ளார்ந்த உணர்வுகளில் (Instincts)  ஒன்றாக அது திகழ்கிறது. அதன் காரணமாக மனிதன் வணங்கி வழிபடும் தன்மையினை கொண்டவனாக இருக்கிறான். மனிதனிடம் காணப்படும் ஏனைய உள்ளார்ந்த உணர்வுகளிலிருந்து (Response of Instincts)  மாறுபட்ட, தனித்துவமான உள்ளார்ந்த உணர்வின் துலங்களாக இது இருக்கிறது. ஆகவே, மார்க்கத்தில் நம்பிக்கை கொள்வதும், அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்வதும் மனிதனின் இயற்கையான உள்ளார்ந்த உணர்வைச் சேர்ந்ததாகும். அது மனிதனின் இயற்கை தன்மையோடு ஒத்துப் போவதாக இருப்பதால், மனிதனுக்கு உடன்பாடான முறையில் அது துலங்கல்களை காட்டுகிறது.




கம்ய+னிஸ மற்றும் முதலாளித்துவ அறிவார்ந்த தலைமையில் இது மாறுபட்டதாக இருக்கிறது. மனிதனின் இயற்கை நிலைக்கு இவை முரண்பட்டதாக இருக்கின்றன. கம்யூனிஸ்டுகளின் அறிவார்ந்த தலைமை மார்க்கம் இருப்பதை அடியோடு மறுக்கிறது. அதை ஏற்றுக் கொள்வதை எதிர்க்கிறது. இதனடிப்படையில், மனிதனின் இயற்கை தன்மைக்கு அது முரண்படுகிறது. முதலாளித்துவ அறிவார்ந்த தலைமை மார்க்கத்தை அங்கீகரிப்பதுமில்லை, நிராகரிப்பதுமில்லை. மார்க்கத்தை ஏற்றுக் கொள்வதையோ அல்லது நிராகரிப்பதையோ ஒரு விவகாரமாக அது விவாதிப்பதுமில்லை. எனினும், வாழ்வியலிலிருந்து மதத்தை பிரிப்பதை அது வலியுறுத்துகிறது. மேலும், வாழ்வியலிலே மார்க்கத்துக்கு தொடர்பு இல்லாத வகையில் உலக பயன்களின் அடிப்படையில் விவகாரங்கள் மேலாண்மை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை அது ஆதரிக்கிறது. ஆகவே, மனிதனின் இயற்கை தன்மையுடன் அது முரண்படுகின்றதுடன், இந்த சித்தாந்தம் மனித இயல்புடன் ஒத்துப்போகாது வெகு தூரத்தில் நிற்கிறது.





ஆகவே இஸ்லாமிய அறிவார்ந்த தலைமைத்துவம்தான் சரியான ஒரே ஒரு அறிவார்ந்த தலைமைத்துவமாக இருக்கிறது. ஏனெனில் அது மனிதனின் இயற்கை தன்மைக்கும் அறிவுக்கும் ஒத்துப் போவதாக இருக்கிறது. மற்ற அனைத்து அறிவார்ந்த தலைமைத்துவங்களும் தவறானவையாகும். இதனடிப்படையில் இஸ்லாமிய அறிவார்ந்த தலைமைத்துவம் ஒன்றுதான் சரியானதும் வெற்றிகரமான ஒன்றாகவும் திகழ்கிறது எனலாம்.

தொடரும்...