Monday, April 26, 2010

இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் வழிமுறை - (Daw'ah)

இஸ்லாமிய அழைப்புப்பணி பற்றி சிந்திக்கும்போது சில முக்கிய விடயங்களை தெளிவாக முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும். அவற்றில் முக்கியமானதொரு விடயம்தான் இஸ்லாத்தை பின்பற்றுவதால் முஸ்லிம்கள் உலகில் பின்னடைவு எய்திடவில்லை. மாறாக, இஸ்லாத்தை பின்பற்றுவதை கைவிட்ட நாளிலிருந்துதான் அவர்களின் பிற்போக்கு நிலை துவங்கியது என்பதுபற்றிய விடயமாகும். அந்நியக் கலாச்சாரம் தங்கள் மண்ணில் நுழைவதற்கும், மேற்கத்திய சிந்தனை தங்கள் நெஞ்சங்களை ஆட்கொள்வதற்கும் முஸ்லிம்கள் அனுமதித்தார்கள். இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை கைவிட்டதாலும், அதனுடைய அழைப்புப் பணியை (Daw'ah) புறக்கணித்ததாலும், அதன் சட்டங்களை தவறாக செயல்படுத்தியதாலும் அவர்கள் வீழ்ச்சியுற்றார்கள். ஆகவே, இன்று முஸ்லிம்கள் வந்து அடைந்திருக்கும் அதளபாதாளத்திலிருந்து அவர்கள் மறுமலர்ச்சி அடைய வேண்டும் வேண்டுமெனில் முஸ்லிம்கள் முற்று முழுதாக இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு கட்டாயம் திரும்பிட வேண்டும். எனினும் இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்வதன் மூலமும், இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை உலகெங்கிலும் எடுத்துச் செல்வதன் மூலமும், ஒரு இஸ்லாமிய அரசை நிறுவினாலன்றி முழுமையான இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு முஸ்லிம்களால் திரும்பிவிட இயலாது. பின்னர் அந்த அரசு இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையை அழைப்புப்பணி மூலம் உலகெங்கிலும் எடுத்துச் செல்லும்.ஏனெனில், இஸ்லாம் மட்டுமே உலகை சீர்திருத்தும் ஆற்றல் பெற்றது. மேலும் இஸ்லாத்தின் மூலமாக அல்லாமல் உண்மையான மறுமலர்ச்சியை கொண்டு வர இயலாது. அது முஸ்லிம்களுக்கு என்றாலும் அல்லது மற்றவர்களுக்கு என்றாலும் சரியே.







அறிவார்ந்த தலைமையாக உலகெங்கும் அழைப்புப்பணி எடுத்துச் செல்லப்பட வேண்டும். அதிலிருந்து செயலாக்க அமைப்பு (முறைமை) (System - நிதாம்) பிறக்கிறது. மேலும் அனைத்து சிந்தனைகளும் இந்த அறிவார்ந்த தலைமை மீதுதான் கட்டமைக்கப்படுகின்றன. மேலும் இத்தகைய சிந்தனையிலிருந்துதான் விதிவிலக்கு ஏதுமின்றி ஒருவரை ஆதிக்கம் செலுத்தும் வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தின் அனைத்துக் கருத்துக்களும்(Concepts) பிறக்கின்றன.








கடந்த காலங்களில் அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட்ட அதே முறையில், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் உதாரணத்தோடு அவர்களின்(ஸல்) வழிமுறையிலிருந்து சற்றும் விலகிச் செல்லாமல் இன்றைய நாட்களிலும் அழைப்புப்பணி மேற்கொள்ளப்பட வேண்டும். கால மாற்றத்தின் வேறுபாட்டிற்கு எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் இவை சாதனங்களிலும், தோற்றங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களே ஒழிய அடிப்படையில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை. யுகங்கள் மாறிய போதிலும், மக்களும் இடங்களும் மாறியப் போதிலும் வாழ்க்கையின் சாரமும் (Essence of life) உண்மை நிலையும் மாறிவிடவில்லை. அவை மாறவும் இயலாது.







ஆகவே அழைப்புப்பணி மேற்கொள்வதற்கு வெளிப்படையான அணுகுமுறையும், மன உறுதியும் ஆற்றலும் சிந்தனையும் தேவைப்படுகின்றன. மேலும், இஸ்லாத்தின் சிந்தனைக்கும் அதன் வழிமுறைக்கும் (Fikrah & Tareeqah - Thought and Method)  முரண்பாடாக உள்ள அனைத்தையும் தீவிரமாக எதிர்க்கக்கூடிய மனோதிடமும் வேட்கையும் அழைப்பின்போது தேவைப்படுகின்றன. அழைப்புப்பணியைச்சூழவுள்ள சூழலும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் அழைப்பாளர்களுக்கு பாதகமாகவோ, அல்லது சாதகமாகவோ இருந்த போதிலும் சமூகத்தில் ஊடுருவியிருக்கின்ற தவறான அடிப்படைகளை வெட்ட வெளிச்சமாக்குவதும் அவற்றை எதிர்ப்பதும் அழைப்பாளர்களுக்கும் அதன் இயக்கத்திற்கும் மிக முக்கிய கடமையாகிறது.







இங்கே மக்களோடு ஒத்துப் போவதாக இருந்தாலும், அல்லது ஒத்துப்போகவில்லையென்றாலும், அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்தாலும் மக்களின் மரபுகளுக்கு இணக்கமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இறுதியான இறையாண்மை (Sovereignty - Siyadah) இஸ்லாமிய சித்தாந்தத்திற்கே மட்டுமே உரியது என்பதை நிலைநாட்டும் விதமாக அழைப்புப்பணி மேற்கொள்வது அவசியமாகிறது.





அழைப்புப்பணி செய்பவர்கள் மக்களுக்கு முகஸ்துதி செய்ய மாட்டார்கள். அதிகாரமுடையவர்களுக்கு அடிபணிய மாட்டார்கள். மக்களின் மரபுகளையும், பாரம்பரியத்தையும் லட்சியம் செய்ய மாட்டார்கள். மக்கள் தங்களை ஏற்றுக் கொள்கிறார்களா அல்லது ஏற்றுக்கொள்ளவில்லையா என்பதில் கவனம் செலுத்த மாட்டார்கள். மாறாக, அவர்கள் சித்தாந்தத்தை மட்டும் பின்பற்றுகிறவர்களாகவும், அதைத் தவிர வேறு ஒன்றையும் பொருட்டாக எண்ணாதவர்களாகவும், அதனை மட்டுமே முழுமையாக எடுத்துரைப்பவர்களாகவும் இருப்பார்கள். மேலும் ஏனைய சித்தாந்தங்களை பின்பற்றுகிறவர்களிடம் அதனை அவர்கள் பின்பற்றிவருமாறு கூறுவதற்கு எங்கும் அனுமதியில்லை. இதற்கு மாறாக, நிர்பந்தம் ஏதுமில்லாமல் இந்த சித்தாந்தத்தை (இஸ்லாம்) தழுவுவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ஏனெனில் அழைப்புப் பணிக்கு தேவைப்படுவது என்னவென்றால், இஸ்லாத்திற்கு இணையாக எந்த சித்தாந்தமும் இருக்க முடியாது என்றும், இஸ்லாத்திற்கு மட்டும்தான் இறையாண்மை (Sovereignty - Siyadah)  உரியது என்றும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதும் அதனை எடுத்தியம்புவதும்தான்.






அவன்தான் தனது தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் ஏனைய தீன்களை(வாழ்வொழுங்குகளை) மிகைக்கும் பொருட்டு அனுப்பி வைத்தான். இதனை இணை வைப்பவர்கள் வெறுத்த போதிலும் சரியே. (அத்தவ்பா : 33)






இறைதூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மகத்தான செய்தியுடன் இந்த உலகத்திற்கு வந்தார்கள். முழு உலகத்திற்கும் வெளிப்படையாக அறைகூவல் விடுத்தார்கள். அவர்கள்(ஸல்) தனது சத்தியத்தை உறுதியுடன் விசுவாசித்தார்கள். மக்களை சத்தியத்தின் பால் அழைத்தார்கள். மேலும், கருப்பர்களையும், வெள்ளையர்களையும், ஆட்சியாளர்களையும், சாமானியர்களையும் அவர்களின் பாரம்பரியம், மரபு, மதம், கோட்பாடு ஆகியவற்றின் வேறுபாடு எதையும் பாராமல் அனைவரையும் இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். இஸ்லாத்தின் மகத்தான செய்தியை விடுத்து வேறு எது ஒன்றின்பாலும் அவர்கள் (ஸல்) கவனம் செலுத்தவில்லை. குறைஷியர்களின் பொய்யான தெய்வங்களை கடுமையாக சாடுவதின் மூலம் தங்கள் அழைப்புப்பணியை ஆரம்பித்தார்கள். அவர்கள்(ஸல்) தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தன்னந்தனியாக நின்ற போதிலும் குறைஷியர்களின் அடிப்படை கோட்பாட்டினை கடுமையாக எதிர்த்து அதை சாடினார்கள். அவர்களுக்கு (ஸல்) உதவி செய்பவர்கள் யாரும் இல்லை. அவர்கள்(ஸல்) அழைப்பு விடுக்கும் இஸ்லாத்தின் மீது கொண்டிருந்த அசைக்க முடியாத தீவிரமான நம்பிக்கை ஒன்றைத் தவிர எந்தவிதமான ஆயுதமோ உதவியோ அவர்களிடத்தில்(ஸல்) இல்லை. அரபு மக்களின் பாரம்பரியம், மரபு, மதம் கோட்பாடு ஆகியவற்றை அவர்கள்(ஸல்) துளியளவு கூட லட்சியம் செய்யவில்லை. இந்த வகையில் அவர்கள்(ஸல்) எந்த விதமான மரியாதையையோ அல்லது பணிவையோ அவர்களிடம் காண்பிக்கவில்லை.







இதுபோலவே, அழைப்புப்பணி செய்பவர்கள் அனைத்தையும் எதிர்த்து ஆக வேண்டும். அவர்கள் எதிர்ப்பவற்றில் மக்களின் பாரம்பரியம், மரபு, தவறான சிந்தனை மற்றும் தவறான கருத்துக்கள் ஆகியவைகள் அடங்கும். வெகுஜனக் கருத்து (Public Opinion)  தவறாக இருக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக கடும் போராட்டம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதை செய்ய வேண்டும். அவற்றை பின்பற்றுகிறவர்களுடைய வெறித்தனங்களுக்கு ஆளாக நேரிடினும், உருக்குலைந்த கொள்கைகளில் ஒட்டிக் கொண்டிருப்பவர்களின் கடும் பகையை எதிர்கொள்ள நேரிடினும், அவர்களின் மதத்தையும், அடிப்படை கோட்பாட்டினையும் எதிர்த்தெ ஆக வேண்டும்.






இலேசான சலுகை கூட காட்டாமல், இஸ்லாமிய நெறிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கரிசனம் அழைப்புப்பணி மேற்கொள்கிறவர்களுக்கு அவசியமாக இருக்க வேண்டும். எந்தவிதமான சமரசத்தையோ, சலுகையையோ ஏற்றுக் கொள்ளக்கூடாது. கவனக்குறைவையும், காரியங்களை ஒத்திப்போடும் பழக்கத்தையும் அறவே விட்டொழிக்க வேண்டும். இதற்கு மாறாக பிரச்சினைகளை, முழுமையாக நிர்வாகம் செய்து, உறுதியான முறையில் அவறிற்கான உடனடித் தீர்வு காண வேண்டும். சத்தியத்திற்கு இடையூறான எந்த பரிந்துரையையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. தாக்கீஃப் கோந்திரத்தார், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு நிபந்தனையாக, தமது வழிபபாட்டுச்சிலையான அல் லாத்தை (Al laat)  உடைத்தெறியாது, மூன்று வருடங்கள் தம்முடன் வைத்துக் கொள்வதற்கும், தொழுகையிலிருந்து விலகி இருப்பதற்கும் அனுமதிகோரி அனுப்பி வைத்த தூதுக்குழுவினரின் வேண்டுகோளை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இரண்டு வருடங்களுக்கு அல்லாத்தை விட்டு வைக்க வேண்டும். அல்லது ஒரு மாதத்திற்கேனும் அதை விட்டு வைக்க வேண்டும் என அவர்கள் கேட்டதைக்கூட இறைதூதர்(ஸல்) மறுத்துவிட்டார்கள். இந்த வேண்டுகோளை அவர்கள் உறுதியாகவும், இறுதியாகவும் எந்தவித தயக்கமோ அல்லது இரக்கமோ காட்டாமல் மறுத்து விட்டார்கள். இது ஏனெனில் ஒன்று மனிதன் விசுவாசம் கொள்ள வேண்டும் அல்லது நிராகரித்து விட வேண்டும். அதன் விளைவாக ஒன்று சுவனம் செல்ல வேண்டும் அல்லது நரகம் செல்ல வேண்டும் என்பதுதான். எனினும் தங்கள் கைகளால் அந்த உருவச்சிலை உடைபட வேண்டாம் என்ற அவர்களின் கோரிக்கையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதன்படி அபூ சுஃப்யானையும், அல்மூஹீரா இப்னு ஷீஆபாவையும் அதனை உடைக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். முழு அகீதாவிற்கும், அதனை நடைமுறைப்படுத்த தேவையானவற்றிற்கும் குறுக்கே நிற்கும் எந்த ஒன்றையும் நிச்சயமாக அவர்கள்(ஸல்) ஏற்றுக் கொள்ளவில்லை. நடைமுறைப்படுத்துவதில் இடம்பெறும் சாதனத்தையும் (Means)  தோற்றத்தையும், அமைப்புகளையும் (Forms)  பொறுத்தவரை அவைகளுக்கு இஸ்லாமிய அகீதாவோடு எந்தவித தொடர்பும் இல்லை என்ற காரணத்தினால் அவற்றை அவர்கள் (ஸல்) ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொள்ளும் தருணத்தில் இஸ்லாமிய சிந்தனையிலும் அதன் வழிமுறையிலும் (குமைசயா ரூ வுயசநநஙயா) எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் சிந்தனை மற்றும் அதன் செயலாக்க அமைப்பு (Fikrah & Tareeqah)  ஆகியவற்றை முழுமையாக பாதுகாக்கும் விதத்தில் செயல்பட வேண்டும். அதற்கு தேவைப்படும் எந்த சாதனத்தையும் (Means) பயன்படுத்துவதில் கேடு ஒன்றும் கிடையாது.






இஸ்லாமிய அழைப்புப்பணி மேற்கொள்ளப்படும்போது, ஒரு குறிப்பிட்ட இலக்கோடு ஒவ்வொரு செயலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பணியாளர்கள் எப்பொழுதும் இந்த நோக்கத்தைக் குறித்து விழிப்புணர்வோடு இருந்து அதை நிறைவேற்ற வேண்டும். இதில் அவர் தன்னைத்தானே ஈடுபடுத்திக் கொண்டு, அதை நிறைவேற்றுவதற்கு அயராது பாடுபட வேண்டும். ஆகவே, பணியாளர் செயலாக்கம் இல்லாத சிந்தனையில் நிறைவு கொள்ள மாட்டார். அவ்வாறெனில் அதை உறக்க நிலை தத்துவம் (Hyprotic Philosophy)  என்றோ அல்லது அலங்கார தத்துவம் (Fanciful Philosophy)  என்றோதான் கருதுவார். அதுபோலவே குறிக்கோள் இல்லாத சிந்தனையிலும் செயலிலும் அவர் நிறைவு அடைய மாட்டார். இறுதியில் அக்கறை இன்மையிலும், அவநம்பிக்கையிலும் முடிவுறும் சுழற்சி இயக்கமாகவே (Spiral Motion)  அதை கருதுவார். இதற்கு மாறாக, அழைப்புப் பணியாளர் சிந்தனையுடன் செயலை இணைப்பதை வலியுறுத்த வேண்டும். இவ்விரண்டையும் ஒரு குறிப்பிட்ட லட்சியத்திற்காக இணைத்து செயல்படுத்த வேண்டும். அது நடைமுறைக்கு ஏற்றாற்போலவும் குறிக்கோளை நிறைவேற்றக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.








மக்கமா நகரத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமையை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். அங்குள்ள சமூகம் இஸ்லாத்தை செயலாக்க அமைப்பாக (System) ஏற்றுக் கொள்ளாது என்பதை உணர்ந்தபொழுது மதினாவின் சமூகத்தை தயார்படுத்தினார்கள். மதினாவில் அவர்கள்(ஸல்) இஸ்லாமிய அரசை நிறுவினார்கள். அதன் மூலம் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தினார்கள். இஸ்லாத்தின் செய்தியை மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு பின்னர் அதை எடுத்துச் செல்லும் விதமாக இஸ்லாமிய உம்மாவை தயார்படுத்தினார்கள். இறைத்தூதர்(ஸல்) காட்டித்தந்த அதே வழியில் இந்த பணியினை முஸ்லிம்கள் தொடர்ந்தார்கள். ஆகவே கிலாஃபா அரசு இல்லாத இந்த சூழலில், இஸ்லாமிய அழைப்புப் பணியினை மேற்கொள்ளும்போது இஸ்லாத்தை நோக்கி மக்களை அழைப்பது, இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தி, அதன் செய்தியை உலகெங்கிலும் எடுத்துச் செல்லும் இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கு செயலாற்றுவதன் மூலம் மக்களை இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்பச் செய்வது ஆகிய பணிகள் அதில் அடங்கியிருக்க வேண்டும். இதன்மூலம், இஸ்லாமிய வாழ்க்கை முறைக்கு திரும்புவதற்காக உம்மாவில் மேற்கொள்ளப்படும் அழைப்புப்பணி உலகம் முழுவதையும் இஸ்லாத்தின்பால் அழைக்கும் இஸ்லாமிய அரசின் அழைப்புப்பணியாக மாற்றம் பெறும். மேலும் இஸ்லாமிய உலகில் மட்டும் மேற்கொள்ளப்படும் அழைப்புப்பணி (Local Da’wah)  அகிலம் அனைத்திற்கும் உரிய பொதுவான அழைப்புப்பணியாக மாற்றம் பெறும்.







தற்சமயம் நிலைபெற்றுள்ள அடிப்படை கோட்பாடுகளை (Doctrines- Aqeedah)  சரிபடுத்துவது, அல்லாஹ்(சுபு)வுடன் உள்ள தொடர்பை பலப்படுத்துவது ஆகியவற்றை தெளிவாக உள்ளடக்கியதாக இஸ்லாமிய அழைப்புப்பணி இருக்க வேண்டும். மேலும் எல்லா துறைகளிலும் அழைப்புப்பணி பிரகாசமாக மேற்கொள்ளப்பட்டு மக்களின் அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வுகள் வழங்கப்படும் விதமாக இருக்க வேண்டும். எனவேதான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மக்கள் எதிர்நோக்கிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும், அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற ஒவ்வொரு வினாவுக்கும் முழுமையாக விடையளிக்கும்படியாக திருமறை வசனங்களை இறக்கிக்கொண்டேயிருந்தான். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கீழ்கண்ட இறைவசனங்களை மக்காவில் ஓதுபவர்களாக இருந்தார்கள்.


அபூலஹபின் இருகரங்களும் நாசமடைவதாக. (அல் மஸ்த்:1)



நிச்சயமாக இது கண்ணியமிக்க ஒரு தூதரின் வார்த்தையாகும். இது கவிஞனின் வார்த்தையல்ல. நீங்கள் சொற்பமாகவே விசுவாசம் கொள்கிறீர்கள். (அல் ஹாக்க:40,41)



(அளவிலும், நிறுவையிலும்) மோசடி செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து வாங்கும் போது முழு அளவை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் மனிதர்களுக்கு கொடுக்கும் போது அளவையிலும், நிறுவையிலும் (குறைபதன்மூலம்) நஷ்டம் ஏற்படுத்துகிறார்கள். (அல் முதாஃப்பிஃபின்:1,3)




விசுவாசம் கொண்டு நற்கருமம் செய்பவர்களுக்கும் சுவனம் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதுதான் மகத்தான் வெற்றியாகும். (அல் புருஜ்:11)



மேலும் மதினாவில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.



தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத்தை கொடுத்து வாருங்கள். (அல்பகரா:43)



கனத்தவர்களாகவோ, இலேசானவர்களாகவோ புறப்படுங்கள். உங்கள் செல்வங்களைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் போராடுங்கள். (அத்தவ்பா:41)



மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பின்வரும் வசனங்களை ஓதினார்கள்.



விசுவாசம் கொண்டவர்களே! உங்களுக்கிடையில் குறிப்பிட்ட தவணைக்கு கடன் கொடுக்கும் சமயத்தில் அதை எழுத்து மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள். (அல் பகரா:282)



உங்கள் மத்தியிலுள்ள செல்வந்தர்களுக்கு இடையில் மட்டும் செல்வம் சுற்றிக் கொண்டிருக்காதிருக்கும் பொருட்டு...(அல்ஹஷர்:7)



நரகத்தின் தோழமையைக் கொண்டவர்களும் சுவனத்தின் தோழமையை கொண்டவர்களும் சமமானவர்கள் அல்ல. சுவனத்தின் தோழமையை பெற்றுக் கொண்டவர்களெ வெற்றியாளர்கள். (அல் ஹஷ்ர்:20)



இவ்வாறு மனிதனை மனிதன் என்ற அந்தஸ்த்தில் வைத்து, அவனைப் பற்றி முழுமையாக இஸ்லாம் உரையாடுகிறது. அதன் மூலம் அவனிடம் முழுமையான மற்றும் தீவிரமான மாற்றத்தை அது கொண்டு வருகிறது. இதனடிப்படையில் இஸ்லாமிய அழைப்புப்பணியின் வெற்றி என்பது, மக்கள் தங்கள் அன்றாட வாழ்வியல் விவகாரங்களை தீர்த்துக் கொள்ளும் பொருட்டு இஸ்லாத்தின் செயலாக்க அமைப்பை (System of Islam - Nidam al Islam)  அவர்களிடம் எடுத்துச் செல்வதிலேயே தங்கியிருக்கிறது. எனவே இந்த அழைப்புப்பணியை வாழ்வின் இலக்காகக்கொண்டு அழைப்புப்பணியாளர்கள் தமது பயணத்தை மிக மிக முனைப்புடன் தொடரவேண்டும்.






குறையற்ற வகையிலும், நிறைவாகவும், முழுமையாகவும் பணியாற்ற வேண்டும் என்ற உந்துதலை தங்களிடத்தில் ஏற்படுத்திக் கொள்ளாத வரையில் அழைப்புப் பணியாளர்கள் தீவிரமான முறையில் பணியாற்றி தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பது சாத்தியம் இல்லாத விஷயமாகும். நிரந்தரமாக சத்தியத்தை தேடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். எந்த அந்நிய சிந்தனையிலிருந்தும் தங்களை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும் விதமாக தொடர்ந்து சத்தியத்தை தேடுபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். அவர்களிடத்தில் தொற்றிக் கொள்ள வாய்ப்புள்ள அந்நிய சிந்தனைகளிலிருந்தும் அவற்றிற்கு நெருக்கமாக உள்ள சிந்தனைகளிலிருந்தும் அவர்கள் தங்களை தூரமாக்கிக் கொள்ள வேண்டும். இத்தகைய நடவடிக்கை தாங்கள் சுமந்து செல்லும் சிந்தனையை பரிசுத்தமாகவும் தெளிவாகவும் வைத்துக் கொள்ள உதவிடும். சிந்தனையில் பரிசுத்தம் (Purity in Thought),  அதில் தெளிவு (Clarity in Thought)  ஆகிய இரண்டு மட்டும்தான் இஸ்லாத்தின் வெற்றிக்கும், தொடர்ந்து அந்த வெற்றியை நிலைபடுத்துவதற்கும் உத்திரவாதம் அளிக்கக்கூடியதாகும்.






அல்லாஹ்(சுபு)விடமிருந்து வந்த கட்டளையாக எண்ணி இந்த கடமையை அழைப்புப் பணியாளர்கள் நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ்(சுபு)வின் உவப்பை மாத்திரம் எதிர்பார்த்தவர்களாக ஆனந்தத்துடனும், மிகுந்த உற்சாகத்துடனும் இந்த பணியினை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். மக்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டையோ அல்லது வேறு எந்த உலக இலாபங்களையோ நிச்சயமாக அவர்கள் தேடக்கூடாது. அல்லாஹ்(சுபு)வின் உவப்பை பெறுவதற்கு முயற்சிப்பதைத் தவிர வேறு எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது.

Tuesday, April 20, 2010

இஸ்லாமிய நாகரீகம் - Islamic Civilisation - Al Hadarah Al Islamiyyah



நாகரீகம் (Hadarah)  என்பதற்கும் பொருளியல் முன்னேற்றம் ; (Madaniyyah)  என்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. நாகரீகம் என்பது வாழ்க்கையைப் பற்றிய அனைத்து சிந்தனைகளையும் உள்ளடக்கியதாகும். ஆனால் பொருளியல் முன்னேற்றம் என்பது வாழ்வியல் நடவடிக்கைகளில் பயன்படுத்தும் புலன் உணர்வுக்கு உட்பட்ட (Sensed Objects)  பொருட்களின் தொகுப்பு ஆகும். நாகரீகம், வாழ்க்கையைப் பற்றிய குறிப்பிட்ட கண்ணோட்டத்தின் அடிப்படையில் உருவான சிந்தனையாக இருப்பதுடன், பொருளியல் முன்னேற்றம் குறிப்பிட்ட ஒன்றாகவோ அல்லது பொதுவானதாகவோ இருக்கலாம். ஆகவே, நாகரீகத்தின் படைப்பான உருவச்சிலைகள் போன்றன குறிப்பானவைகளாக இருக்கும் அதே வேளையில் அறிவியலாலும், (Science)  அதன் முன்னேற்றத்தாலும், தொழிற்துறைகளாலும், அதன் பரிணாம வளர்ச்சியினாலும் உற்பத்தியாகும் பொருளியல் படைப்புகள் பொதுவானவைகள். மேலும் அவை குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ அல்லது நாட்டுக்கோ மட்டும் சொந்தமானவைகள் அல்ல. மாறாக அவை தொழிற்துறைகள், விஞ்ஞானம் ஆகியவற்றைப் போன்று பொதுவானவைகளாகும் (universal).







நாகரீகத்திற்கும், பொருளியல் முன்னேற்றத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டினை நாம் எப்பொழுதும் கவனிக்க வேண்டும். மேலும் நாகரீகத்தின் விளைவாக ஏற்படும் பொருளியல் முன்னேற்ற அம்சங்களுக்கும், அறிவியல் மற்றும் தொழிற்சாலைகளால் உருவாகும் பொருளியல் முன்னேற்ற அம்சங்களுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டினையும் நிச்சயமாக நாம் கவனிக்க வேண்டும். பொருளியல் முன்னேற்றத்தினால் உருவான ஒரு பொருளை நாம் ஆராயும்போது அதற்கும் நாகரீகத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டினை அறிந்திட இது அவசியமாகிறது. அறிவியல் மூலமாகவும், தொழிற்துறையாலும் விளைந்த மேற்கத்திய பொருட்களை பயன்படுத்துவது தொடர்பாக எவ்வித தடையுமில்லை. எனினும் எக்காரணத்தைக் கொண்டும் மேற்கத்திய நாகரீகத்தின் விளைவாக உருவான பொருட்களை நாம் ஏற்றுக்கொள்ளவே கூடாது. ஏனெனில் மேற்கத்திய நாகரீகத்தை ஏற்றுக் கொள்வதற்கு நமக்கு அனுமதியில்லை. இதற்கு காரணம் அந்த நாகரீகம் நிறுவப்பட்டிருக்கும் அடித்தளத்தின் முதற்படியோடும், வாழ்க்கையைப் பற்றிய அதன் கண்ணோட்டத்தோடும், மனிதனின் மகிழ்ச்சி தொடர்பாக அதன் அர்த்தத்தோடும் இஸ்லாம் முற்றாக முரண்பட்டு நிற்கிறது.








மார்க்கத்தை வாழ்வியலிலிருந்து பிரிக்கும் கொள்கையிலிருந்து மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் வாழ்வியல் விவகாரங்களில் மார்க்கம் ஆதிக்கம் செலுத்துவதை அது மறுக்கிறது. எனவே அரசியலிலிருந்து மார்க்கத்தை அது பிரித்து வைத்திருக்கிறது. வாழ்க்கையிலிருந்து மார்க்கத்தை பிரித்து, வாழ்வியல் விவகாரங்களில் அதன் பங்களிப்பை மறுப்பவர்களுக்கு இந்த பிரிவினை இயல்பான ஒன்றாக இருக்கக்கூடும். இந்த அடித்தளத்தில்தான் அதன் வாழ்வியலும், வாழ்வியல் செயலாக்க அமைப்புகளும் (System of life) நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாகரீகம், மனிதனின் முழு வாழ்க்கையையும், உலக பயன்களை மட்டும் தேடி அடைந்து கொள்ளும் செயல்பாட்டுத் தளமாக கருதுகிறது. எனவே வாழ்க்கையின் செயல்பாடுகளுக்கு அதன் அளவுகோள் ஆதாயமேயாகும். ஆகையால் ஆதாயத்தின் அடிப்படையிலேயே அதன் வாழ்வியல் செயலாக்க அமைப்புகளும் (System of life - Nidam) அதன் நாகரீகமும் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றன. அதன் செயலாக்க அமைப்புகளிலும் நாகரீகத்திலும் உலக பயன்கள்தான் முக்கியமான சிந்தனையாகவும் (Thoughts)  வெளிப்படையான அம்சமாகவும் திகழ்கின்றன. இது ஏனெனில் வாழ்க்கையை உலக பயன்கள் அடிப்படையில்தான் அது விளக்குகிறது. அவர்களுடைய பார்வையில் மகிழ்ச்சி என்பது அதிகபட்சமான புலன் இன்பத்தை மனிதனுக்கு கொடுக்கக்கூடியதாகவும், அதனை அடையும் சாதனங்களை பெற்றுக் கொள்வதாகவும், இருக்கிறது. இதனடிப்படையில் உலக பயன்களை அறுவடை செய்ய வேண்டும் என்ற ஆசையின் மீது மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உலக பயன்களைத் தவிர வேறு எந்த ஒன்றுக்கும் அங்கீகாரமோ அல்லது பரிசீலனையோ கொடுப்பதற்கு முகாந்திரமே இல்லாத விதத்தில் அதன் வாழ்வியல் செயலாக்க அமைப்புகளின் அளவுகோள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே ஆன்மீக விவகாரம் தனிமனித அளவில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. சமூக கட்டமைப்பில் அதற்கு எந்த தலையீடும் கிடையாது. கிருஸ்தவ தேவ ஆலயத்திற்குள்ளும் அதன் மதகுருமார்களின் கைகளுக்குள்ளும் ஆன்மீக விவகாரங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. இதன் முடிவாக மேற்கத்திய நாகரீகத்தின் எந்தவிதமான ஒழுக்க மாண்புகளோ அல்லது ஆன்மீக மற்றும் மனித பண்புகளோ கிடையாது. மாறாக பொருளியல்வாத அடிப்படை மட்டுமே இருக்கிறது. இதன் காரணமாக மனிதநேய நடவடிக்கைகள் அரசிடமிருந்து பிரிக்கப்பட்டு செஞ்சிலுவை சங்கம், மிஷனரிகள் போன்ற சமூக அமைப்புகளிடத்தில் தஞ்சம் புகுந்துவிட்டன. பொருளியல்வாத அடிப்படையிலுள்ள உலக பயன்கள் நீங்களாக மற்ற அனைத்து மாண்புகளும் வாழ்க்கையிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. இவ்வாறான வாழ்வியல் சிந்தனைகளைக் கொண்டதாகவே மேற்கத்திய நாகரீகம் இருக்கிறது.







இஸ்லாமிய நாகரீகத்தைப் பொருத்தவரை அது மேற்கத்திய நாகரீகம் கட்டமைக்கப்பட்டுள்ள அடிப்படைக்கு முற்றிலும் முரண்பட்ட அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் வாழ்வியல் கண்ணோட்டமும், மகிழ்ச்சி பற்றி அது கொண்டிருக்கும் அர்த்தமும் மேற்கத்திய நாகரீகத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அல்லாஹ்(சுபு)வின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் அவன்(சுபு) பிரபஞ்சம், வாழ்வு, மனிதன் ஆகியவற்றிற்கு ஒரு செயலாக்க அமைப்பை ((Nidam- System)  அமைத்திருக்கின்றான் என்ற நம்பிக்கை மீதும் இஸ்லாமிய நாகரீகம் நிறுவப்பட்டுள்ளது. அவன்(சுபு) மனித குலத்திற்கு இஸ்லாம் என்ற ஒரே மார்க்கத்துடன், முஹம்மது(ஸல்) அவர்களை அனுப்பி இருக்கிறான். இதற்கு பொருள் என்னவென்றால், அல்லாஹ்(சுபு) மீதும் அவனுடைய (சுபு) மலக்குகள் மீதும், அவனுடைய(சுபு)வேதத்தின் மீதும் அவனுடைய(சுபு) தூதர்கள் மீதும், மறுமைநாள் மற்றும் அல்களா வல்கத்ர் ஆகியவற்றின் மீதும் உள்ள நம்பிக்கையை உள்ளடக்கிய இஸ்லாமிய அகீதாவின் மீதுதான் இஸ்லாமிய நாகரீகம் நிறுவப்பட்டுள்ளது என்பதாகும். ஆகவே, அகீதாதான் நாகரீகத்தின் அடித்தளமாக இருப்பதால் ஆன்மீக அடிப்படை மீது அதன் நாகரீகம் அமைக்கப்பட்டுள்ளது.







இஸ்லாமிய நாகரீகத்தில் வாழ்க்கை முறை என்பது இஸ்லாமிய அகீதாவிலிருந்து பிறக்கும் இஸ்லாமிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அகீதாவின் மீதுதான் வாழ்க்கை மற்றும் அதன் செயல்பாடு ஆகிய இரண்டும் நிர்மானிக்கப்பட்டிருக்கின்றன. ஆன்மாவையும் (Spirit)  இயற்பொருட்களையும் (Matter)  ஒன்று கலக்கக்கூடியதாக இஸ்லாமிய தத்துவம் இருக்கிறது. அதாவது அஹ்காம் ஷரிஆவினால் மனிதனின் செயல்பாடுகள் வழிநடத்தப்படும் இந்த வழிமுறைதான் வாழ்க்கையின் அடிப்படையாக விளங்குகிறது. அதே வேளையில் மனிதனின் செயல்பாடுகள் பொருளியல் அடிப்படையில் இருக்கும் நிலையில் அவன் செயல்பாடுகளை ஹராம் ஹலால் அடிப்படையில் மேற்கொள்ளும்போது அல்லாஹ்(சுபு)வுடன் அவனுக்கு இருக்கும் தொடர்பை அவன் கவனத்தில் கொள்வதுதான் ஆன்மா (Spirit - RUH) எனப்படுகிறது. இதன் மூலம்; ஆன்மாவையும் இயற்பொருட்களையும் ஒன்று கலக்கும் செயல் ஏற்படுகிறது. இதன்படி, அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகள் முஸ்லிம்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறன. அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளுக்கு இணக்கமாக தன் செயல்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு முஸ்லிமுடைய இறுதி லட்சியம் அல்லாஹ்(சுபு)வின் உவப்பை எய்துவதே அல்லாமல் உலக பயன்களாக இருக்க முடியாது. எனினும், செயல்பாடுகளை மேற்கொள்ளும்போது உடனடியாக தேடப்படுவது பொருளியல் பயனாக இருக்கலாம். அது செயல்களுக்கு ஏற்ப மாறுபடும். வர்த்தகத்திலோ அல்லது வியாபாரத்திலோ ஈடுபட்டிருக்கும் ஒருவரின் எண்ணம் இலாபம் ஈட்ட வேண்டும் என்ற பொருளியல் பயனாக இருக்கலாம். எனினும் அவருடைய வியாபாரம் பொருளியல் பயன் (Meterialistic)  சார்ந்த செயல்பாடாக இருந்தாலும்கூட அல்லாஹ்(சுபு)வின் உவப்பை எய்திடும் பொருட்டு அவனுடைய(சுபு) ஏவல் விலக்கல் கட்டளைகள் மூலமாக அவனுடன்(சுபு) அவருக்குள்ள தொடர்பை உணர்ந்து கொள்ளும் விதமாக அவர் அதில் இயக்கப்படுகிறார். அதே வேளையில் அந்த செயல்பாட்டை மேற்கொள்வதன் மூலம் அவர் அடைந்து கொள்ள எண்ணிய இலாபம் பொருளியல் பயனாக இருக்கிறது.







தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் போன்ற ஆன்மீகம் சார்ந்த பயனாகவும் அது இருக்கலாம். உண்மையை கடைபிடித்து நேர்மையாக இருத்தல், நன்றி உணர்வை வெளிப்படுத்துதல் போன்ற ஒழுக்க மாண்புகள் சார்ந்த பயனாகவும் இருக்கலாம். நீரில் மூழ்க இருக்கும் ஒருவரை காப்பாற்றுதல் அல்லது ஏழைகளுக்கு உதவுதல் போன்ற மனித நேயம் சார்ந்த பயனாகவும் இருக்கலாம். மனிதன் தன் செயல்பாட்டை மேற்கொள்ளும்போது இந்த பயன்களை கவனத்தில் கொண்டு அவைகளை அடைய எண்ணுகிறான். எனினும், மனிதனின் செயல்பாடுகளுக்கு பின்னணியிலிருந்து அவனை இயக்கும் ஆற்றல் இந்த பயன்களாகவோ, அவன் நோக்கமாக கொண்ட இறுதி இலட்சியமாகவோ அவை இருப்பதில்லை. அவை செயல்பாட்டின் பலன்களாக இருப்பதுடன் அவை செயல்பாட்டின் தன்மைக்கு ஏற்ப மாறுபடுகின்றன.







மகிழ்ச்சி என்பது அல்லாஹ்(சுபு)வின் உவப்பை எய்துவதேயன்றி மனிதன் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் இல்லை. ஒருவன் தன்னுடைய வாழ்வை பாதுகாத்துக் கொள்வதற்காக உடல்சார்ந்த தேவைகளையும் (Organic Needs)  உள்ளார்ந்த உணர்வுகளின் விருப்பங்களையும் (Instinctual Desise)  நிறைவு செய்து கொள்வது அவசியமான விதிமுறையாக இருக்கிறது. ஆனால், இவைகளை நிறைவு செய்து கொள்வது மட்டும் மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்காது. இங்கு தொகுத்துக் கூற விரும்பும் சுருக்கமான கருத்து யாதெனில்: வாழ்வியல் பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் இதுதான். இந்த கண்ணோட்டம்தான் இஸ்லாமிய நாகரீகத்தின் அடிப்படை. ஒவ்வொரு அம்சத்திலும் மேற்கத்திய நாகரீகம் இஸ்லாமிய நாகரீகத்திலிருந்து முரண்படுகிறது என்பது தெளிவாக விஷயம். இஸ்லாமிய நாகரீகத்தின் விளைவாக உருவாகும் பொருளியல் முன்னேற்றத்தின் அடிப்படையிலுள்ள குறிப்பிட்ட பொருட்கள் இஸ்லாத்திற்கு மட்டும் பிரத்தியோகமாக உரியவை. அவை மேற்கத்திய நாகரீகத்தின் விளைவாக உருவாகும் பொருளியல் முன்னேற்ற அடிப்படையிலுள்ள பொருட்களோடு முரண்படுவதாக இருக்கின்றன. உதாரணமாக ஒரு நிழற்படம் (Photograph)  என்பது பொருளியல் முன்னேற்றத்தின் விளைவாக உருவான பொருளாகும். (Madaniyya Objects)  ஒரு பெண்ணின் உடல் அழகை வெளிப்படுத்தும் நிர்வான நிழற்படத்தை மேற்கத்திய நாகரீகம் ஒரு கலை அம்சமாக கருதுகிறது. அந்த நிழற்படம் மேற்கத்திய நாகரீகத்தின் விளைவாக உருவாகிய பொருளியல் முன்னேற்றத்தின் குறிப்பிட்ட பொருளாக இருக்கிறது. மேலும் அது பெண்கள் குறித்த அதன் வாழ்க்கை கண்ணோட்டமாகவும் இருக்கிறது. ஆகவே மேற்கத்திய சமூகத்தைச் சார்ந்த ஒரு மனிதன் அதை கலை அம்சமாக கருதுகிறான். அதில் பெருமை பாராட்டுகிறான். எனினும், இந்த பொருள் இஸ்லாமிய நாகரீகத்திற்கும், பெண்களின் கௌரவம் என்று கருதி எவைகளை பாதுகாக்க வேண்டும் என்று இஸ்லாம் கருதுகிறதோ அத்தகைய சிந்தனைகளுக்கும் முரண்படுகிறது. இதன் முடிவாக இத்தகைய நிழற்படங்கள் தடை செய்யப்பட வேண்டும். ஏனெனில் அவை பாலியல் வேட்கையை தூண்டக்கூடியதாக இருக்கின்றன. இதன் விளைவாக சமூகத்தின் ஒழுக்க மாண்புகள் தளர்ந்து போவதற்கு இவை உடனடி காரணங்களாக இருக்கின்றன. இது போலவே வீடு என்பது மற்றொரு பொருளியல் முன்னேற்றம் சார்ந்த பொருளாக இருக்கிறது. ஒரு முஸ்லிம் தனக்கு வீடு கட்ட எண்ணும் போது வெளியில் இருப்பவர்களுக்கு வீட்டினுள் இருக்கும் பெண்கள் தெரியாத வகையில் வீட்டின் அமைப்பு இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனம் செலுத்துவார். இதனடிப்படையில் ஒரு முஸ்லிம் வீட்டைச் சுற்றி மதில் சுவர் எழுப்புகிறார். ஆனால் மேற்கத்தியர்கள் இதில் கவனம் செலுத்துவதில்லை. மேற்கத்திய நாகரீகத்தின் அடிப்படையில் உருவான பொருளியல் முன்னேற்றம் சார்ந்த அனைத்து பொருட்களுக்கும் இது பொருந்தும். உதாரணமாக உருவ சிலைகளை கூறலாம். இது போலவே நிராகரிப்பவர்களின் பிரத்தியோகமான ஆடைகளை அணிவது முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அவைகள் வாழ்க்கையைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தைப் பெற்றிருக்கின்றன. எனினும் இதர ஆடைகளை அணிவதற்கு தடையில்லை. உதாரணமாக, தேவைக்காக அணியும் ஆடைகள் அழகூட்டும் ஆடைகள். இவைகளில் குஃப்ர் அம்சங்கள் இல்லையெனில் அவற்றை அணியலாம். அவைகள் பொதுவான பொருட்களாகும். அவற்றை உபயோகிப்பதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி உண்டு.







அறிவியல் மற்றும் தொழிற்துறைகள் மூலமாக உருவாக்கப்பட்ட பரிசோதனை கூட உபகரணங்கள், மருத்துவத்துறை மற்றும் தொழிற்துறை கருவிகள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகிய பொருளியல் முன்னேற்றம் சார்ந்த பொருட்கள் பொதுவானவைகளாகும். நாகரீகத்தின் விளைவாக உருவாகாததும், அதனோடு தொடர்பு இல்லாததுமான இத்தகைய பொருட்களின் உபயோகத்திற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி உண்டு.





இன்றைய உலகை ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் மேற்கத்திய நாகரீகத்தை மேலோட்டமாக பார்வையிட்டால் மனிதனின் மன அமைதிக்கு அதனால் உத்திரவாதம் அளிக்க முடியாது என்பது தெளிவாக விளங்கும். இதற்கு மாற்றமாக மனித சமூகத்தில் ஆழமாக இடம்பெற்றுள்ள துன்பத்திற்கும் துயரத்திற்கும் அதுவே காரணமாகவும் இருக்கிறது. வாழ்வியலிலிருந்து மார்க்கத்தைப் பிரிப்பதை அடிப்படையாக ஏற்றுள்ள இந்த நாகரீகம், மனிதனின் இயற்கை தன்மைக்கு முரண்படுகிறது. ஆகவே சமூகத்தில் ஆன்மீக விஷயங்களுக்கு அது முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வாழ்க்கையை உலக இலாபங்களின் தொகுப்பாக அது கருதுகிறது. உலக இலாபங்களை அடைவதுதான் மனிதர்களுக்கிடையிலுள்ள உறவின் அடிப்படையாக அது கருதுகிறது. எனவே, ஓயாத துன்பத்தையும் மனப்போராட்டங்களையும் அது உருவாக்குகின்றது. வாழ்வின் அடிப்படையாக உலக இலாபங்கள் கருதப்படும்வரை இயல்பாகவே அதற்கான போராட்டமும் கூடுதலாகவே இருப்பதுடன் இங்கே மனிதர்கள் மத்தியில் உறவைப்பேணுவதற்கு வலிமையை பிரயோகிக்கவேண்டிய நிலையும் இயல்பாகவே காணப்படும். எனவே இந்த நாகரீகத்தை பின்பற்றுகிறவர்களுக்கு காலனியாதிக்க சிந்தனை ஏற்படுவது இயல்பான விஷயமாகும். ஏனெனில் வாழ்க்கையின் அடிப்படையாக உலக பயன்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. அங்கு எந்த வகையான ஒழுக்க மாண்புகளுக்கும் இடம் கிடையாது. ஆகையால், ஆன்மீக மாண்புகள் உதாசீனப்படுத்தப்பட்ட அதே வழியில் அனைத்து ஒழுக்க மாண்புகளும் அந்த சமூகத்தில் மங்கிப்போவது இயற்கையான நிகழ்வுதான். எனவே அங்கு போட்டி, போராட்டம், ஆக்கிரமிப்பு, காலனியாதிக்கம் ஆகியவற்றின் மீது வாழ்வு நிறுவப்பட்டுள்ளது. மக்களிடம் ஆன்மீக நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக ஓயாத மனப்போராட்டம் ஏற்பட்டுவிட்டது. இதனால் உலகம் முழுவதிலும் பரவலாக தீமை விளைந்திருப்பது மேற்கத்திய நாகரீகம் ஏற்படுத்தியிருக்கின்ற தீய விளைவுகளாக இருக்கின்றன. இதனால் மனித சமூகம் கடும் கோபமுற்று குற்றம் சாட்டும் வகையில் இன்று நிலைமை இருக்கிறது. உலகில் இந்த நாகரீகம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதின் காரணமாக அழிவை கொண்டுவரும் பல விளைவுகளை நோக்கி மனித சமூகம் சென்று கொண்டிருக்கிறது. முடிவாக மனித வர்க்கத்தின் செயல்பாட்டிற்கு இன்று மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.







கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு வரை உலகில் ஆதிக்கம் பெற்றிருந்த இஸ்லாமிய நாகரீகத்தை ஆய்வு செய்யும் பட்சத்தில், அது காலனி ஆதிக்க கொள்கையை ஒருபோதும் கொண்டதாக இருக்கவில்லை. உண்மையில் இஸ்லாத்தின் கொள்கைக்கு காலனி ஆதிக்கம் அந்நியமானது. ஏனெனில் முஸ்லிம்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் எந்தவித வேறுபாடும் அது காட்டுவதில்லை. எனவே, அதன் நெடிய ஆட்சிகாலம் முழுவதும் தங்களை அதனிடம் ஒப்படைத்துக் கொண்ட மக்கள் அனைவருக்கும் நீதத்தை பெற்றுத் தந்திருக்கிறது. இது ஏனெனில், ஆன்மீக அடிப்படை மீது கட்டமைக்கப்பட்டுள்ள நாகரீகமாக அது இருக்கிறது என்பதுதான். பொருளியல், ஆன்மீகம், ஒழுக்க மாண்புகள் மற்றும் மனித நேயம் ஆகிய அனைத்து மதிப்பீடுகளையும் அது நிறைவு செய்கிறது. வாழ்வியலில் அகீதாவிற்கு உச்சகட்டமான முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அல்லாஹ்(சுபு)வின் ஏவல் விலக்கல் கட்டளைகளினால் வாழ்க்கை கட்டுப்படுத்தப்படுகின்றது. மகிழ்ச்சி என்பது முற்றிலும் அல்லாஹ்(சுபு)வின் உவப்பை அடைந்து கொள்வதுதான் என இஸ்லாம் கருதுகிறது. கடந்த காலங்கள் போல மறுமுறையும் இஸ்லாமிய நாகரீகம் ஆதிக்கம் செலுத்தும் பட்சத்தில் இன்று உலகம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு வழங்கும் என்பதற்கு உத்திரவாதம் உண்டு. மேலும் மனித வர்க்கம் முழுமைக்கும் அது நன்மையை பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.