Monday, March 24, 2008

என் ஈராக்கிய சகோதரனுக்கு!

நீ வாழும் பூமி
அராஜக அதிகாரங்கள் தரும்
அவலங்கள் அழுகுரல்கள் நிறைந்த
மக்கிப் போய்விட்ட மனிதாபிமானச் சான்று!

எண்ணெய் வயல்களின் ஏப்பத்தோடு
நவீன தாத்தாரியரின்
வெட்கத்தனமான வேட்டைக்காடு!

நீ சுயங்கொண்டெழும்வரை
அன்றாடக் கண்ணீரும்
‘அபு குரைபும்’
அவமான அடையாளங்கள் தாம்!

அற்பப் பொருட்களுக்காய் மலையேற்றிய
கண்ணியமான இறந்த காலத்தை – நீ
மீளப்பார் உன் சத்திய சாம்ராஜியம்
சரிந்தது சதிகளால் மட்டுமல்ல!

‘இஸ்லாம்’ அற்ற ‘இஸம்கள்’
இயக்கத் தொடங்க
ஆன்மீக வறுமை அரவணைத்து
மறுமை மறந்த இம்மை வாங்கி
மனித அடிமைத்தனத்தில் கோழையானாய்!

நிரந்தர வெற்றிக்காக நீ
அஸ்தமனத்தை நிலையாக்கும்
‘தாகூத்ய’ பொதி சுமக்கும்
கழுதைத் தனத்தை விட்டுவிடு

உதயத்தை அல்குர்ஆனிய
உயிரோட்டத்தில் மட்டும் தேடு
மீண்டும் தூய நாகரிகத்தை
உலகத்திற்கே கற்றுக் கொடுப்போம்.

No comments:

Post a Comment