Friday, March 19, 2010

இஸ்லாத்தின் அறிவார்ந்த தலைமைத்துவம் - பகுதி 06 (The Intellectual Leadership of Islam : Al - Qiyadatul Fikriyyatu Fil Islam)

இங்கே ஒருகேள்வி  எழுகிறது.

அதாவது முஸ்லிம்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துகிறார்களா? அல்லது அவர்கள் அடிப்படை கோட்பாட்டை மட்டும் தழுவிக் கொண்டு இஸ்லாத்திற்கு அந்நியமான வழிமுறைகளையும் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துகிறார்களா? இதற்கு இதுதான் பதில்:






இறைதூதர்(ஸல்) அவர்கள் மதினா வந்தது முதல் கி.பி.1918வரை (A.H. 1336) இஸ்லாமிய அரசு காலனி ஆதிக்க வாதிகளின் கைகளால் வீழ்த்தப்படும் வரை, அனைத்து காலங்களிலும் முஸ்லிம்கள் இஸ்லாத்தையே நடைமுறைப்படுத்தி வந்தார்கள். முஸ்லிம்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தியது மிக விரிவான விஷயமாகும். வெற்றிகரமாகவும், வெற்றி கொள்ள முடியாதவர்களாகவும் முஸ்லிம்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தினார்கள்.






நடைமுறையில் இஸ்லாத்தை செயல்படுத்துவதை, ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பு வகிக்கும், இரண்டு தரப்பினர் உறுதிப்படுத்துகின்றனர். ஒருவர் நீதிபதி அவர் மக்களின் விவகாரங்களை தீர்த்து வைப்பவர். மற்றவர் ஆட்சியாளர், அவர் மக்களை ஆட்சி செய்பவர். தொடர்ச்சியான அறிவிப்புகள்  (Tawatur)  மூலம் கூறப்படுவது என்னவென்றால், அல்லாஹ்(சுபு)வின் தூதர்(ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இஸ்லான்புல்லின்  (Istanbul)  இஸ்லாமிய கிலாஃபா அரசு மறையும் வரை மக்களின் விவகாரங்களை தீர்த்து வைக்கும் நீதிபதிகள் ஷரிஆ சட்டங்களின் அடிப்படையில்தான் அனைத்து விவகாரங்களையும் தீர்த்து வைத்தார்கள். இது முஸ்லிம்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் அல்லாதவருக்கும், முஸ்லிம்களும் மத்தியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. உரிமை மீறல்கள், குடும்ப விவகாரம், குற்றவியல் தண்டனை ஆகிய அனைத்து விவகாரங்கள் அனைத்தையும் நீதிமன்றம் தீர்த்து வைத்தது. இந்த நீதிமன்றம் இஸ்லாமிய ஷரிஆ சட்டங்களின் அடிப்படையிலுள்ள ஒரே நீதிமன்றமாக மட்டுமே இயங்கி வந்தது. இந்த காலகட்டத்தில் எந்த ஒரு வழக்கும் இஸ்லாமிய ஷரிஆ சட்டங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் தீர்த்து வைக்கப்பட்டதாக, எந்த ஒரு அறிவிப்பும் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை. இஸ்லாமிய நாடுகளிலுள்ள எந்த ஒரு நீதிமன்றமும், எந்த ஒரு வழக்கையும், இஸ்லாம் அல்லாதவைகளைக் கொண்டு தீர்ப்பு கூறவில்லை. இந்த நிலை காலனி ஆதிக்கவாதிகளின் தொடர்ச்சியான ஆதிகத்தினால் இஸ்லாமிய நீதிமன்றம் ஷரிஆ நீதிமன்றம் (Shariah Court)  நிஸாம் நீதிமன்றம் (Nizam Court) என இரண்டு வகை நீதிமன்றங்களாக பிரிக்கப்படும்வரை இருந்து வந்தது. பழம்பெரும் நகரங்களான ஜெருசலம், பாக்தாத், டமாஸ்கஸ், கெய்ரோ மற்றும் இஸ்தான்புல் ஆகிய நகரங்களில் அமைந்த ஷரிஆ நீதிமன்றங்களில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்களில் இதற்கான தெளிவான ஆதாரம் அடங்கியிருக்கிறது. இந்த ஆவணங்கள் நீதிபதிகள் ஷரிஆவை நடைமுறைப்படுத்தினார்கள் என்பதற்கு உறுதியான ஆதாரங்களாக திகழ்கின்றன.






சலிம் அல்பஸ் (Saleem al Baz)  போன்ற முஸ்லிம் அல்லாதவர்கள் கூட இஸ்லாமிய ஃபிக்ஹ் சட்டங்களை (Islamic Fiqh)  பயிலவும் எழுதவும் செய்தார்கள். அவர் அல்மஜல்லாஹ் (Al - Majallah)  என்ற மாத இதழில் இதற்கு வர்ணனைகளை (Commetary) எழுதினார். இஸ்லாமிய அரசின் இறுதி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்களைப் பொருத்தவரை அவைகள் இஸ்லாமிய அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்பு (Fatwa)  அடிப்படையில் கொண்டு வரப்பட்டவை. அவைகள் அஹ்காம் ஷரிஆவிற்கு முரண்பாடாக இருக்க வில்லை. முடிவாக, 1275ல் (கி.பி.1857) உத்மானிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் உரிமையியல் சட்டங்களும் வணிக சட்டங்களும் (Law of Rights and Trade) 1276A.H. ல் (கி.பி. 1858) அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 1288A.H.ல் (கி.பி.1870) நீதிமன்றம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. பின்னர் ஷரிஆ நீதிமன்றம் (Shariah Court) மற்றும் அலுவலக சட்ட நீதிமன்றம் (Official Law Court)  ஆகிய நீதிமன்றங்களை ஏற்படுத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1295A.H.ல் (கி.பி. 1877) அபராத தண்டனை விதிக்கும் நீதிமன்றங்களை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. 1296A.H.ல் (கி.பி. 1878) உரிமையியல் மற்றும் அபராத நடைமுறைகள் வெளியிடப்பட்டன. இதன்போது உரிமையியல் சட்டங்களை பயன்படுத்துவதற்கு எந்த முகாந்திரத்தையும் உலமாக்கள் அறியாததினால் அவைகளை கிடப்பில் போட்டு விட்டார்கள். 1286A.H.ல் (கி.பி.1868) கொடுக்கல் வாங்கல் விவகாரங்களுக்கு (Muamlat - Transactions)  அரசாணையாக அல் மஜல்லாஹ் என்ற ஷரிஆ மாத இதழ் வெளியிடப்பட்டது. இவை அனைத்தும் இஸ்லாம் அனுமதித்த சட்டங்கள் என்ற வகையில்தான் அரசாணைகளாக (Canons)  வெளியிடப்பட்டன. இவை ஷேக் அல் இஸ்லாமினால் முறையாக தீர்ப்பு செய்யப்பட்டு, அவைகளை அவர் அனுமதித்த பிறகுதான் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. எனினும் கி.பி.1918 முதல் இஸ்லாமிய நாடுகளில் ஆக்கிரமிப்பு செய்து வந்த காலனி ஆதிக்க அதிகாரிகள் சில உரிமையியல் வழக்குகளை இஸ்லாம் அல்லாத சட்டங்களைக் கொண்டு தீர்த்து வைத்தார்கள். ஆனால், காலனி ஆதிக்க இராணுவம் ஆக்கிரமிப்பு செய்யாத நாடுகளின் ஆட்சியாளர்கள் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தாத போதிலும், சமீபகாலம் வரை நீதித்துறை தொடர்ந்தும் இஸ்லாத்தின் சட்டங்களின் படிதான் செயல்பட்டு வந்தது. உதாரணமாக, ஆப்கானிஸ்தான், ஹிஜாஸ், நஜ்து (ஆகிய அரபிய தீபகற்பம்) மற்றும் குவைத் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். இதிலிருந்து எமக்கு விளங்குவது என்னவென்றால் நீதித்துறையில் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததுடன்;, இஸ்லாமிய அரசின் நெடிய காலம் முழுவதும் நீதித்துறையில் இஸ்லாம் அல்லாத சட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதேயாகும்.









ஆட்சியாளர்களால் ஐந்து துறைகளில் இஸ்லாம் நடைமுறைப்படுத்தப்படுவது அஹ்காம் ஷரிஆவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை சமூகத்துறை, பொருளாதாரத்துறை, கல்வித்துறை, வெளிநாட்டு விவகாரத்துறை மற்றும் ஆட்சித்துறை ஆகியன. இந்த துறைகள் தொடர்பான அஹ்காம் ஷரிஆ அனைத்தும் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமூகவியல் வழிமுறை (Social System)  ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள உறவையும், இந்த உறவின் விளைவாக எழும் விஷயங்கள் (தனிநபர் அந்தஸ்து) அனைத்தையும் விளக்குகிறது. இஸ்லாமிய நாடுகளில் காலனி ஆதிக்க சக்திகள் நிலைத்திருந்த போதிலும், குஃப்ர் ஆட்சிமுறை இருந்தபோதிலும், சமூகத்துறையில் ஷரிஆ மட்டுமே செயல்படுத்தப்பட்டது. மேலும் நிச்சயமாக வேறு எந்த வழிமுறையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பொருளாதாரத் துறையைப் பொருத்தவரை, அது இரண்டு வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவதாக, மக்களின் விவகாரங்களை கவனித்துக் கொள்வதற்காக அரசு பொது மக்களிடம் வருவாய் வசூலிக்கும் முறை, இரண்டாவதாக வருவாய்களை செலவிடும் முறை. வருவாய்களை வசூலிக்கும் விஷயத்தைப் பொருத்தவரை, அரசு ஸகாத்தை ரொக்கமாகவும், நிலமாகவும், கால் நடைகளை பெற்றுக் கொள்வதைக் கொண்டும் வசூலித்து வந்தது. இதை முஸ்லிம்கள் கடமையாகவும், வணக்கமாகவும் கருதி செலுத்தி வந்தார்கள். இந்த பணம்; திருமறை குர்ஆன் குறிப்பிடப்பட்டள்ள எட்டு பிரிவினருக்கு மட்டும் விநியோகிக்கப்பட்டது. தனது செலவினங்களுக்காக ஒருபோதும் அரசு ஸகாத் தொகையை பயன்படுத்தியதில்லை. ஷரிஆவின் கட்டளைப்படி தனது செலவினங்களுக்கு தேவையான பணத்தை அரசு வசூலித்தது.







ஆகவே, விளை நிலங்களுக்கு வரி(கரஜ்) வசூலிக்கப்பட்டது. முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து ஜிஸ்யா வசூலிக்கப்பட்டது. உள்நாட்டு வெளிநாட்டு வணிகத்தின் மேற்பார்வையாளர் என்ற முறையில் சுங்க வரியை அரசு வசூலித்தது. ஷரிஆவின் கட்டளைகளுக்கு முரண்பாடாக அரசு நிதி வசூலித்தது கிடையாது. ஊனமுற்றவர்களின் நிதி விநியோகத்தைப் பொருத்தவரை அரசு நஃபகாஹ் (Nafeqah -  நிதியுதவி) வழிமுறையை செயல்படுத்தியது. இயலாமையிலுள்ளவர்களையும், (Safeeh) ஹராமான வழியில்; செலவு செய்பவர்களையும் (Mubaddin)  காப்பாளராக இருந்து அரசு கவனித்து வந்தது. ஒவ்வொரு நகரங்களிலும் யாத்திரீயர்களுக்காகவும், ஆதரவற்றவர்களுக்காகவும், பயணிகளுக்காகவும் சாலை நெடுகிலும் விடுதிகளை அரசு நிர்மாணித்திருந்தது. இதன் நினைவுச்சின்னங்கள் பிரதான இஸ்லாமிய நகரங்களில் இன்றளவும் காணப்படுகின்றன. அரசின் செலவினங்கள் முற்றிலும் ஷரிஆவின் வழிமுறைப்படி கட்டுப்படுத்தப்பட்டதுடன் வேறு எந்த வழிமுறைகளின்படியும் கட்டுப்படுத்தப்படவில்லை. இந்த துறைகளில் ஏற்பட்ட எந்த ஒரு குறைபாடும் கவனக்குறைவினாலும், தவறான நடைமுறைப்படுத்தலின் காரணமாகவும் ஏற்பட்டதே தவிர ஷரிஆ நடைமுறைகள் இல்லாத காரணத்தினால் அல்ல.







கல்விக்கொள்கையின் அடித்தளமாக இஸ்லாமே இருந்தது. பாடத்திட்டத்தின் அடிப்படை இஸ்லாமிய கலாச்சாரத்தைக் கொண்டதாக இருந்தது. இஸ்லாத்தோடு முரண்படும் அந்நிய கலாச்சாரம் எதுவும் பின்பற்றப்படாமல் இருப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. உதுமானிய கிலாஃபா அரசின் இறுதி காலகட்டத்தில் புதிய கல்விக்கூடங்களை திறப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவு அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் அக்காலத்தில் காணப்பட்ட குறிப்பான பிற்போக்கு அம்சமாக இருந்தது. அக்காலகட்டத்தில் முஸ்லிம்களின் அறிவுத்திறனில் ஏற்பட்ட வீழ்ச்சி உச்சகட்டத்தை அடைந்திருந்தமை இதற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்கியது. இஸ்லாமிய அரசின் அனைத்து காலகட்டத்திலும், இஸ்லாமிய பூமிதான் அறிஞர்களுக்கும், கல்வி பயிலும் மாணவர்களுக்கும் கிப்லாவாக இருந்தது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். கார்ட்டோபா (Cortoba), டமாஸ்கஸ், அலக்ஸாண்டிரியா, கெய்ரோ, பாக்தாத் ஆகிய நகரங்களில் இருந்து பல்கலைக்கழகங்கள் உலகெங்கிலுமுள்ள கல்வித்துறை நடவடிக்கைகளில் மகத்தான விளைவை ஏற்படுத்தியிருந்தன.







இஸ்லாமிய அரசின் வெளியுறவுக் கொள்கை இஸ்லாத்தின் மீது அமைக்கப்பட்டிருந்தது. இஸ்லாத்தின் அடிப்படையில் மற்ற நாடுகளுடன் உறவுகளை இஸ்லாமிய அரசு நிர்ணயித்தது. மற்ற நாடுகள் அதனுடன் இஸ்லாமிய அரசு என்ற முறையில் நடந்து கொண்டன. அதனுடைய அனைத்து வெளிநாட்டு உறவுகளும் இஸ்லாத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்களின் நலனின் அடிப்படையிலும் இருந்து வந்தது. இஸ்லாமிய அரசின் வெளியுறவுக் கொள்கை இஸ்லாமிய கொள்கையாகவே இருந்து வந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும் தேவையில்லை என்ற அளவுக்கு உலகெங்கிலும் நன்கு அறியப்பட்டதாக இருந்தது.








ஆட்சிமுறையைப் பொருத்தவரை இஸ்லாமிய அரசின் அமைப்பு எட்டு தூண்களில் அமைக்கப்பட்டதாக இருந்தது. ஆட்சித்தலைவராக கலீஃபா விளங்கினார். கலீஃபாவின் ஆட்சித்துறை உதவியாளர் (Delecated Assistant-Mo’aawen Tafweedh), கலீஃபாவின் நிர்வாகத்துறை உதவியாளர் (Executive Assistant-Mo’aawen Tanfeedh) ஜிஹாதின் தலைவர் (Ameer of Jihad), ஆளுநர்கள் (Wulah), நீதிபதிகள் (QuDah), அரசுத்துறைகள் (State Departments) மற்றும் மக்கள் மன்றம் (Majlis al Ummah)  ஆகியவை அவையாகும். முஸ்தபா கமால் என்ற காலனி ஆதிக்க காஃபிர் 1342 A.H. (கி.பி.1924) இஸ்லாமிய கிலாஃபா அரசை கலைக்கும் வரை முஸ்லிம்கள் கலீஃபா இன்றி இருந்ததில்லை. கிலாஃபா அரசு நீக்கப்படும் வரை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு கலீஃபா இருந்துகொண்டுதான் இருந்தார். ஒரு கலீஃபா மரணமடையும்போதோ அல்லது நீக்கப்படும்போதோ மற்றொரு கலீஃபா தேர்ந்தெடுக்கப்பட்டார். கிலாஃபா ஆட்சி நலிவுற்றிருந்த இருந்த காலகட்டத்தில்கூட இவ்வாறுதான் நிலை இருந்து வந்தது. இஸ்லாமிய அரசு என்பது கிலாஃபா அரசாக இருப்பதால், கலீஃபா இருக்கும் பட்சத்தில்தான் அது இஸ்லாமிய அரசாக கருதப்படும். ஆட்சியிலும், அரசுப்பணியிலும், கலீஃபாவின் உதவியாளர்கள் இஸ்லாமிய அரசின் அனைத்து காலங்களிலும் இருந்து வந்தனர். அவர்கள் உதவியாளர்களேதவிர அமைச்சர்கள் அல்ல(Wazirs). அப்பாஸிய கிலாஃபாவில் அவர்கள் அமைச்சர்கள் என்று அழைக்கப்பட்டாலும் உதவியாளர்களாகவே இருந்து வந்தார்கள். ஜனநாயக ஆட்சி முறையிலுள்ள அமைச்சர்கள் அந்தஸ்து அவர்களுக்கு அளிக்கப்படவில்லை, மாறாக கலீஃபாவின் அங்கீகாரம் பெற்றவர்களாக ஆட்சியிலும், அரசுப்பணிகளிலும் கலீஃபாவின் உதவியாளர்களாகவே அவர்கள் இருந்து வந்தார்கள். அதே வேளையில் அனைத்து அரசு அதிகாரங்களும் கலீஃபாவின் கைகளில் இருந்து வந்தது. ஆளுநர்களும், நீதிபதிகளும், அரசுத்துறைகளும் சந்தேகமின்றி இருந்து வந்தன. குஃப்பார்கள் இஸ்லாமிய பூமியை ஆக்கிரமிப்பு செய்த காலகட்டத்தில் முஸ்லிம்களின் அனைத்து விவகாரங்களும் நடைபெற்று வந்தமைக்கும், ஆளுநர்கள், நீதிபதிகள், அரசுத்துறைகள் அங்கு காணப்பட்டமைக்கும் ஆதாரம் எதுவும் தேவையில்லை. ஜிஹாத்தின் தலைவரைப் பொருத்தவரை, வெற்றி கொள்ள முடியாதது என்று உலகெங்கிலும் புகழ்பெற்ற இஸ்லாமிய சேனையின் தலைவர் என்ற அந்தஸ்தில் இராணுவ விவகாரங்களை அவர் கவனித்து வந்தார். மக்கள் மன்றம் என்ற மஜ்லிஸ் அல் உம்மாவைப் பொருத்தவரை, நேர்வழிகாட்டப்பட்ட கலீஃபாக்களின் காலத்திற்கு பின்பு அதன் அவசியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இதற்கு காரணம் அது ஆட்சி அமைப்பின் ஒரு அம்சமாக இருந்ததே தவிர அதன் ஒரு தூணாக இருக்கவில்லை. ஆலோசனை கலத்தல் (Shurah)  என்பது கலீபாஃவின் மீது மக்களுக்கு இருக்கின்ற ஒரு உரிமையாகும். எனவே அதை அவர் உதாசீனப்படுத்தினால், அவர் உதாசீனத்துக்கு ஆளாக நேரிடுமே ஒழிய ஆட்சிமுறை இஸ்லாமிய ஆட்சி முறையாகவே இருந்துவரும். இது ஏனெனில் இஸ்லாத்தில் ஆலோசித்தல் என்பது கருத்துக்களை பெறுவதற்குத்தானே தவிர ஆட்சி செய்வதற்கு அல்ல. ஜனநாயகத்தின் பாராளுமன்ற முறை இதற்கு நேர்மானது. ஆகவே இஸ்லாமிய ஆட்சிமுறை; நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பது இங்கே தெளிவாகிறது.







கலீஃபாவுக்கு பையத் கொடுப்பது என்பதைப் பொருத்தவரை ஒரு கேள்வி இங்கு எழக்கூடும். கிலாஃபா ஆட்சிமுறையில் பரம்பரை உரிமை வழிமுறை இல்லை என்பது நன்கு நிலை நிறுத்தப்பட்ட விஷயம். வேறு வகையில் கூறுவதெனில் மன்னராட்சி முறையில் இருப்பதைப் போன்று ஆட்சித் தலைமையை பரம்பரை உரிமை அடிப்படையில் அடைந்து கொள்ளும் வழிமுறை இஸ்லாத்தில் அமைக்கப்படவில்லை. மாறாக, முஸ்லிம் மக்களிடம் பையத் பெறுவதின் மூலம் அரசின் தலைமை பொறுப்பு பெற்றுக் கொள்ளப்படும். இந்த நிலை சில காலம் இருந்து வந்தது. அதன் பிறகு செல்வாக்கு பெற்ற மனிதர்களிடத்தில் (Ahle al Halli Wal Aqd) பையத் பெறும் முறையும், கிலாஃபத்தின் இறுதிகாலத்தில் இருந்தது போல் ஷேக் அல் இஸ்லாத்திடம் பையத் பெறும் முறையும் இருந்து வந்தது. இஸ்லாமிய கிலாஃபா அரசின் நெடிய வரலாற்றில் பையத் பெறாமல் எந்த கலீஃபாவும் நியமிக்கப்பட்டதில்லை என்ற நிலை இருந்து வந்தது. பையத் பெறாமல் பரம்பரை உரிமை மூலம் ஒரு கலீஃபா கூட நியமிக்கப்பட்டதாக எந்த ஒரு நிகழ்வும் நடந்ததாக அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த வழிமுறைக்கு ஆற்றல் பெறாமல், பையத் பெறும் முறை தவறாக பயன்படுத்தப்பட்டது. இவ்வாறாக, ஒரு கலீஃபா தன் மரணத்திற்கு முன்பாக தனது மகனுக்காகவோ, சகோதரனுக்காகவோ, உடன் பிறவா சகோதரனுக்காகவோ அல்லது எந்த ஒரு குடும்ப நபருக்காகவோ மக்களிடம் பையத் பெறுபவராக இருந்தார்கள். கலீஃபாவின் மரணத்திற்கு பின்பு அந்த நபர் பையத்தை புதுபித்துக் கொண்டார். இது பையத் பெறுவதை தவறாக பயன்படுத்துவதாக இருந்தாலும் பரம்பரை ஆட்சி முறையை சார்ந்தாகவோ அல்லது ஆட்சிக்கு தானாகவே வந்துவிடும் முறையாகவோ (Succession to the throne)  இருக்கவில்லை. பாராளுமன்றமுறையிலோ அல்லது ஜனநாயக ஆட்சி முறையிலோ தேர்தல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு அரசு ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்றபோதும்கூட அவை தேர்தல்கள் என்றுதான் அழைக்கப்படுகிறதே தவிர நியமனம் என்று கருதப்படுவதில்லை என்பதற்கு இது நிகரானதாகும். மேற்கண்ட காரணங்களால், இஸ்லாமிய அரசின் அனைத்து கால கட்டத்திலும் இஸ்லாமிய ஆட்சி முறைதான் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதை ஒருவர் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.







இஸ்லாமிய அறிவார்ந்த தலைமையின் செயல் ரீதியான வெற்றியைப் பொருத்தவரை, இரண்டு முக்கிய விஷயங்களின் அடிப்படையில் அது இணையற்றதாக விளங்கியது.








முதலாவதாக: மிகத் தாழ்ந்த அறிவாற்றலின் காரிருளில், தான்தோன்றித் தனமாக குலப்பெருமையும் கோத்திரப் பெருமையும் கொண்டவர்களாக, ரத்தம் சிந்தும் முரட்டுப் போர் புரியும் அறியாமையிலிருந்த அரபு மக்கள் அனைவரையும் இஸ்லாமிய சித்தாந்தம் அறிவாற்றல் எழுச்சிக்கு இட்டுச் சென்றது. இஸ்லாம் என்ற ஒளியின் பிரகாசத்தில் அவர்கள் மறுமலர்ச்சி அடைந்தார்கள். அவர்களிடம் ஏற்பட்ட இந்த உதயம் அரபு தேசத்துக்கு மட்டும் இல்லாது முழு உலகிலும் பரவியது. இஸ்லாம் என்ற ஒளியினை உலகெங்கிலும் எடுத்துச் செல்லும் மகத்தான பணியில் முஸ்லிம்கள் விரைந்து செயல்பட்டார்கள். பாரசீகத்தையும், ஈராக்கையும், சிரியாவின் நிலப்பரப்பையும், எகிப்து தேசத்தையும், வட ஆப்பிரிக்க நாடுகளையும் இஸ்லாமிய மயமாக்கும் செயல்பாங்கில் முஸ்லிம்கள் தங்களது கரங்களை நுழைத்தார்கள். இந்த தேசங்களிலுள்ள அனைத்து மக்களும் தங்களுக்கென்று மதத்தையும் தேசியத்தையும் மொழியையும் கலாச்சாரத்தையும், பண்பாடுகளையும், மரபுகளையும் பெற்றவர்களாக இருந்தார்கள். ஒவ்வொருவரும் மற்றவர்களிலிருந்து வேறுபட்டவர்களாகவே இருந்தார்கள். பாரசீகர்களின் தேசியம், சிரியாவின் ரோமர்களிடமிருந்தும், எகிப்து தேசத்தின் கோப்ட் (ஊழிவள) தேசியத்திலிருந்தும், வட ஆப்பிரிக்க நாகரீகமற்ற பழங்குடி சமுதாயத்திலிருந்தும் வேறுபட்டதாக இருந்தது. ஒருமுறை அவர்கள் இஸ்லாத்தின் நிழலில் வாழ்ந்து அதை புரிந்து கொண்டவுடன் அவர்கள் அனைவரும் அதை தழுவிக் கொண்டு விட்டார்கள். மேலும் ஒரே தேசத்தினராக முஸ்லிம் உம்மாவாக மாற்றமடைந்து விட்டார்கள். ஆகவே, இந்த மக்களையும் அவர்கள் தேசிய தன்மைகளையும் உருக வைத்து ஒன்றிணைத்து ஒரே சமுதாயமாக மாற்றிய இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை மகத்தானதும் ஈடு இணையற்றதுமாகும். அக்கால கட்டத்தின் போக்குவரத்து சாதனம் ஒட்டகமாகவும், தொலைதொடர்பு சாதனம் நாவின் பேச்சாகவும், எழுத்துக் கலை எழுதுகோளோடு மட்டும் நின்றிருந்த நிலையில்தான் இந்த மகத்தான சாதனை படைக்கப்பட்டது.








எனினும் அல்பத்ஹ்(வெற்றி) என்பது மக்களின் அறிவும் இயற்கை தன்மையும் அவர்களை எதன் பக்கம் வழிகாட்டுகிறதோ, அந்த வழியை அடைந்து கொள்வதற்கு தடைகளாக இருக்கும் பௌதீக தடைகளை அகற்றுவதாகவே இருந்தது. இதன் காரணமாக மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைந்தார்கள். இதற்கு மாறாக, அநீதமான முறையில் ஆக்கிரமிப்பை செய்து வெற்றி கொள்ளப்படும் நாட்டவர்கள் வெற்றி கொண்டவர்களை அந்நியர்களாகவே கருதுவார்கள். உதாரணமாக, மேற்கத்திய ஆதிக்கவாதிகளால் கீழை நாடுகளில் நிறுவப்பட்ட காலனி ஆதிக்கம் எந்தவித பயனையும் விளைவிக்காமல் பல ஆண்டுகள் நீடித்தது. வஞ்சம் நிறைந்த மேற்கத்திய கலாச்சாரத்தின் ஆதிக்கம் இல்லாதபட்சத்தில், வெகு சடுதியில் அழியப் போகின்ற அதன் முகவர்களின் (யுபநவெ) அடக்குமுறை இல்லாதபட்சத்தில், கண் இமைக்கும் நேரத்திற்கு முன்பாகவே சித்தாந்தத்திலும் அதன் ஆட்சி முறையிலும் இஸ்லாம் மறுபிரவேசம் செய்துவிடும். ஆகவே பல்வேறு இன மக்களை ஒருங்கிணைத்து ஒன்றாக்கி இஸ்லாமிய உம்மாவாக, மாற்றிய இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை ஒப்பற்றதாகும். காலனி ஆதிக்கவாதிகள் விளைவிக்கும் நாசம், தீமை ஆகியவற்றையும் மீறி, கொள்கையை சிதைக்கவும் சிந்தனையில் நஞ்சு கலக்கவும் அவர்கள் தீட்டும் திட்டங்களையும் மீறி, இந்நாள்வரை இந்த மக்கள் முஸ்லிம்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். நியாயத்தீர்ப்பு நாள்வரை இந்த மக்கள் ஒரே இஸ்லாமிய உம்மாவாகவே நிலைத்திருப்பார்கள். இஸ்லாத்தில் இணைந்த மக்களோ அல்லது ஏதேனும் ஒரு இனக்குழுவோ இஸ்லாத்திலிருந்து வெளியேறிய நிகழ்வு இஸ்லாமிய வரலாற்றில் ஒருபோதும் நடந்தேறியதில்லை.








அந்தலுஸ் (Andalus -  ஸ்பெயின்) முஸ்லிம்களைப் பொருத்தவரை அவர்கள் ரோமின் கிருஸ்தவ திருச்சபை நீதிமன்றத்தால் (Court of Inquisition)  படுகொலை செய்யப்பட்டார்கள். கில்லோட்டின் (Guillotine)  என்ற தலை வெட்டும் எந்திரங்களால் பல்லாயிரம் முஸ்லிம்கள் சிரம் துண்டிக்கப்பட்டு மாண்டு போனார்கள். நெருப்பு குண்டத்தில் இட்டு பொசுக்கப்பட்டார்கள். புகாரா, காகஸஸ், துர்கிஸ்தான் ஆகிய பகுதிகளைச் சார்ந்த முஸ்லிம்களும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்கள் அடைந்த அதே நாசகார அழிவையே சந்தித்தார்கள். இந்த மக்கள் இஸ்லாத்தைத் தழுவி ஒரே உம்மாவாக ஆகிய பிறகு தங்கள் அகீதாவை பாதுகாக்கும் விடயத்தில் சிரமத்தை சந்தித்த இந்த நிகழ்வு, இஸ்லாமிய அறிவார்ந்த தலைமை அடைந்த வெற்றியின் பரிமாணத்தையும், இஸ்லாமிய அரசு இஸ்லாத்தை நடைமுறைப்படுத்திய பாங்கையும் விளக்கமாக வர்ணிப்பதாக இருக்கிறது.

தொடரும்...

No comments:

Post a Comment