Saturday, November 14, 2009

இறை நம்பிக்கை கொள்வதற்கு இஸ்லாம் காட்டும் வழிமுறை: பகுதி - 01

மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவை பற்றியும், இவைகள் அனைத்தும் தோன்றுவற்கு முன்பு என்ன இருந்தது, இவைகள் அனைத்தையும் தொடர்ந்து என்ன வர இருக்கின்றது, இவை எல்லாவற்றுக்கும் இடையிலுள்ள இடைத்தொடர்பு என்ன என்ற விடயம் தொடர்பாக மனிதன் கொண்டுள்ள சிந்தனைகளின் அடிப்படையில்தான் அவன் மறுமலர்ச்சி அடைகின்றான். ஆகவே மனிதன் மறுமலர்ச்சி அடைய வேண்டுமெனில் அவனுடைய தற்போதைய சிந்தனை ஆழமாகவும், அடிப்படையாகவும், முழுமையாகவும் மாற்றி அமைக்கப்பட்டு புதிய சிந்தனை அவனுள் புகுத்தப்பட வேண்டும். ஏனெனில் இந்த சிந்தனைதான் வாழ்க்கை பற்றிய (தெளிவான) கருத்தை ( எண்ணக்கருவை) (மனிதனிடம்) ஏற்படுத்துகிறது. (மேலும் அதனை உறுதியும் படுத்துகிறது. அதைக் கொண்டுதான் அவனுடைய எண்ணங்கள் வலுவடைய முடியும்) மனிதன் இந்த (உலக) வாழ்க்கைப் பற்றி கொண்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில்தான் அவனுடைய நடத்தைகளை வடிவமைக்கிறான். ஆகவே, தான் நேசிக்கின்ற ஒரு மனிதனைப் பற்றிய அவனது கருத்து ((concept - Maffaheem) அந்த மனிதரிடம் அவன் மேற்கொள்ளும் நடத்தையை (Behavior - Sulook) நிர்ணயிக்கிறது. இதற்கு மாறாக, தான் வெறுப்பு கொண்டிருக்கின்ற ஒரு மனிதனிடம் அவன் கொண்டுள்ள போக்கு வெறுப்பினால் ஏற்பட்ட கருத்தின் அடிப்படையில் இருக்கும். அதே வேளையில் தான் அறியாத ஒரு புதிய மனிதனைப் பற்றிய எந்தவொரு கருத்தும் அவனிடம் உருவாவதில்லை. எனவே, மனிதனுடைய நடத்தைகள் அவனுக்குள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் கருத்துக்களோடு (ஊழnஉநிவ) தொடர்புடையவைகளாகவே இருக்கின்றன. எனவே, சிந்தனையில் வீழ்ச்சியுற்ற ஒரு மனிதனின் நடத்தைகள் சீர்செய்யப்பட்டு மாற்றியமைக்கப்பட வேண்டுமெனில், அவனுடைய சிந்தனைகளும், கருத்துக்களும் முதலில் மாற்றியமைக்கப்பட வேண்டுமென்பது மிகமிக அவசியமாகிறது. அல்லாஹ் (சுபு) கூறுகின்றான்:
நிச்சயமாக எந்தவொரு சமுதாயத்திற்குரியதையும், அவர்கள் தங்களுக்குரியதை தாங்களாக மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அதனை மாற்றியமைப்பதில்லை. (குர்ஆன் 13:11)
வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையை மனிதனிடம் தோற்றுவித்து அவனுடைய கருத்தை மாற்றியமைப்பது ஒன்றுதான் அவனிடம் மனித வாழ்க்கை பற்றிய சரியான கருத்தை நிறுவுவதற்கு ஒரே வழியாகும். மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவைகளின் தற்போதைய நிலை இவைகளெல்லாம் தோன்றுவதற்கு முன்பு இருந்த நிலை, இவைகள் அனைத்தும் முடிந்து போன பின்பு ஏற்படப் போகின்ற நிலை, இந்த மூன்று நிலைகளுக்கும் இடையிலுள்ள இடைத்தொடர்பு குறித்த சிந்தனையை ஒரு மனிதன் (தன்னுள்) மேற்கொள்ளாதவரை வாழ்க்கையைப் பற்றிய அவனுடைய கருத்து ஆக்கப்ப10ர்வமான முறையில் உறுதி அடையாது. மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவை பற்றிய முழுமையான சிந்தனையை வழங்குவதன் மூலம் இதை சாத்தியமாக்க இயலும். ஏனெனில், மனித வாழ்க்கை பற்றிய அனைத்து சிந்தனைகளும் இந்த அறிவார்ந்த அடிப்படை சிந்தனையின் அடித்தளத்தின் மீதுதான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த விஷயங்களைப் பற்றிய முழுமையான ஒரு சிந்தனையை வழங்குவதன் வாயிலாக மனிதனின் மிகப்பெரிய பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்பட்டுவிட்டால், மற்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். ஏனெனில் மற்ற எல்லா பிரச்சினைகளும் இந்த மிகப் பெரிய பிரச்சினையின் கூறுகளாகவோ அல்லது அதன் கிளைகளாகவோதான் இருக்கின்றன. இத்தகைய தீர்வு, மனிதனின் இயற்கை தன்மையோடு பொருந்தக் கூடியதாகவும், அவனுடைய அறிவு ஏற்றுக் கொண்டதாகவும், அவனுடைய உள்ளம் அதனைக் கொண்டு அமைதி அடையக் கூடியதாகவும் இருக்கக்கூடிய சரியான ஒரு தீர்வாக இல்லாத பட்சத்தில், அது அவனை சரியான மறுமலர்ச்சியின் பால் இட்டுச் செல்லாது.
மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவை பற்றிய ஞானமிகுந்த சிந்தனையின் (ஆழமான முழுமைமையும் நிறைந்த சிந்தனை - Enlighten Thought ) மூலமாகத்தான் இத்தகைய உண்மையான தீர்வை எட்ட முடியும்.
ஆகவே மறுமலர்ச்சியையும், அறிவாற்றல் எழுச்சியையும் விழையும் ஒருவர், இந்த ஞானமிகுந்த பிரகாசமான சிந்தனையை பயன்படுத்தி சரியான முறையில் வாழ்வின் மிகப்பெரிய பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட வேண்டும். இந்த தீர்வு அகீதா (அடிப்படைக்கொள்கை ) என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை. அகீதா எனும் அறிவார்ந்த அடிப்படை சிந்தனையின் அடித்தளத்தின் மீதுதான் மனித வாழ்வின் செயல்பாட்டு வழிமுறைகள் (systems – முறைமைகள் ) மற்றும் அவனுடைய நடத்தைகள் பற்றிய விரிவான சிந்தனைகள் அனைத்தும் நிர்மாணிக்கப்படுகின்றன.
இஸ்லாம் மனிதனின் மிகப்பெரிய பிரச்சினையை ஆழமாக அறிந்துள்ளது. அவனுடைய இயற்கை தன்மைக்கு இணக்கமாகவும், அறிவுக்கு பொருத்தமாகவும் இதயத்துக்கு அமைதி ஏற்படுத்தும் விதத்திலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குகிறது. இஸ்லாத்தை தழுவும் ஒருவர் அறிவார்ந்த முறையில் சிந்தித்து இந்த தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதை ஒரு நிபந்தனையாக, அது அவர் முன் வைக்கிறது. ஆகவே, அறிவார்ந்த அடிப்படை சிந்தனை என்னும் அகீதாவின் அடித்தளத்தில் இஸ்லாம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. அது, மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றின் பின்னணியில் ஒரு படைப்பாளன் இருக்கிறான் என்றும், அவன்தான் இவைகளையும், மற்ற அனைத்தையும் படைத்துள்ளான் என்றும் கூறுகிறது. அவன்தான் அல்லாஹ்(சுபு) என்ற படைப்பாளன். அவன் வெறுமை அல்லது இல்லாமையிலிருந்து (From Nothing) அனைத்தையும் படைத்துள்ளான். (உதாரணம். முதல் மனிதர் ஆதம் அலை). அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை (Existence - இருப்பு ) தவிர்க்க முடியாததாக (Indispensible) இருக்கிறது. அவன் யாராலும் படைக்கப்படவில்லை. அவ்வாறு இல்லையெனில் அவன் படைப்பாளனாக இருக்க முடியாது. அவன் படைப்பாளன் என்ற பேரூண்மை அவன் படைக்கப்படவில்லை என்பதையும் அவன் உள்ளமை (இருப்பு) தவிர்க்க இயலாதது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. ஏனெனில், அனைத்துப் படைப்பினங்களும் தாங்கள் நிலைத்திருப்பதற்கு அவனையே சார்ந்துள்ளன. அதே வேளையில் அவன் எந்தவொன்றையும் சார்ந்திருக்கவில்லை.
அனைத்து பொருட்களுக்கும் ஒரு படைப்பாளன் அவசியம் இருக்க வேண்டும் என்பதற்கு அறிவார்ந்த காரணம் என்னவெனில், மனிதனுடைய அறிவு (Mind) அறியக்கூடிய, மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகிய அனைத்தும் ஒரு வரையறைக்கு உட்பட்டதாகவும், பலவீனமானதாகவும், குறை உடையதாகவும், மற்றவைகளிடத்தில் தேவையுடையவைகளாகவும்; இருக்கின்றன என்பதுதான். மனிதன் ஒரு வரையறைக்கு உட்பட்டவனாக இருக்கிறான், ஏனெனில் அந்த வரையறையை விட்டு அவன் தாண்ட முடியாது. வாழ்வும் (life) ஒரு வரையறைக்கு உட்பட்டதுதான். ஏனெனில் அது தனிமனிதனிடமோ அல்லது ஒரு உயிரிடமோ தோன்றி அங்கேயே முடிந்து விடுகிறது. எனவே வாழ்வும் ஒரு வரையறைக்கு உட்பட்டதுதான். பிரபஞ்சமும் வரையறைக்கு உட்பட்டதுதான். ஏனெனில், பிரபஞ்சம் என்பது விண்வெளித்துகள்களின் தொகுப்பாகும். அந்த ஒவ்வொரு துகள்களும் வரையறைக்குட்பட்டவையாகையால் முழுப்பிரபஞ்சமுமே வரையறைக்குட்பட்டதாகும். ஏனெனில் வரையறைக்குட்பட்டவைகளின் தொகுப்பு வரையறைக்குட்பட்டதேயாகும். எனவே மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவை அனைத்தும் ஒரு வரையறைக்கு உட்பட்டவைகள்தான் (Limited). இத்தகைய வரையறைக்கு உட்பட்ட பொருட்களைப் பற்றி ஆழ்ந்த ஆய்வு செய்யும் பொது அவைகள் அனைத்தும் அழிவற்றதாக (Eternal - Azali) காணப்படவில்லை என்பதையும், அவை ஒர் எல்லைக்கு உட்பட்டுள்ளதால் அழியும் தன்மை உடையவை என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். ஆகவே இவைகள் அனைத்தும் நிச்சயமாக மற்றொன்றால் படைக்கப்பட்டிருக்க வேண்டும். அதுதான் மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றின் படைப்பாளனாகும். இந்த படைப்பாளனைப் பொருத்தவரை மூன்று விதமாக சிந்திக்கப் படலாம். ஒன்று: அவன் மற்றொன்றால் படைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு: அவன் தன்னைத் தானே படைத்திருக்க வேண்டும் மூன்று: எந்த ஒன்றாலும் படைக்கப்படாமலும், நிலையாக சுயமாக இருப்பவனாகவும் (Eternal - Azali) அவனது உள்ளமை (Existence) தவிர்க்க முடியாததாகவும் இருக்க வேண்டும். முதல் கருத்து முற்றிலும் தவறானது ஏனெனில் அவன் பிறிதொன்றினால் படைக்கப்பட்டிருந்தால், அவன் வரையறைக்கு உட்பட்டு விடுவான். இரண்டாவது கருத்தின்படி, அவன் தன்னைத் தானே படைத்துக் கொண்டான் என்பதும் தவறானது. ஏனெனில், அவனை படைப்பாளனாக பகுத்தறிவு ரீதியில் ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் அடிப்படையில் அவன் ஒரே சமயத்தில் படைப்பினமாகவும் படைப்பாளனாகவும் இருக்கிறான். இது அடிப்படையிலேயே அறிவுக்கு புறம்பான அபத்தமான கருத்தாகும். ஆகவே படைப்பாளன் என்பவன் அழிவற்றவனாகவும், சுயமாக இருப்பவனாகவும், எந்த ஒன்றையும் சார்ந்து இருக்க வேண்டிய தேவையற்றவனாகவும், அவனது உள்ளமை தவிர்க்க முடியாததாகவும் இருக்க வேண்டும். அவன்தான் அல்லாஹ்(சுபு).
அறிவாற்றல் கொண்ட எந்த ஒரு மனிதனும் தன் புலன் அறிவின் மூலம் அறிந்து கொள்ளும் பொருட்களிலிருந்து அவைகளுக்கு ஒரு படைப்பாளன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முடியும். அவை அனைத்து குறை உள்ளதாகவும், பலவீனமாகதாகவும், மற்றொன்றை சார்ந்து இருப்பவையாகவும் இருக்கின்ற காரணத்தினால், நிச்சயமாக அவைகள் படைக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. ஆகவே, பிரபஞ்சத்திலும் வாழ்விலும் மனிதனிடத்திலும் இடம்பெற்றுள்ள எந்த ஒரு விஷயமும் படைப்பாளனான ஒரு ஒழுங்குப்படுத்தும் நிர்வாகி (Creator and Organiser) இருக்கின்றான் என்பதை ஒருவருக்கு உணர்த்தக் கூடியதாக இருக்கின்றன. ஆகவே, பிரபஞ்ச வெளியில் இடம் பெற்றிருக்கும் எந்த ஒன்றைப் பார்த்தாலும் அல்லது மனித வாழ்வின் எந்த ஒரு நிலை பற்றி ஆய்வு மேற்கொண்டாலும் அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை பற்றி அவைகள் எடுத்துக் கூறிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆகவே இந்த உண்மையின் பக்கம் கவனம் செலுத்துமாறும், அவைகளைக் குறித்தும் அவைகளை சூழ இருப்பவை குறித்தும், அவைகளோடு தொடர்புடையவை குறித்தும் ஆழ்ந்து சிந்தனை செய்யுமாறும், பிறகு அந்த ஆய்வின் முடிவாக அல்லாஹ்(சுபு) இருக்கின்றான் என்பதை அறிந்து நம்பிக்கை கொள்ளும்படியும் திருமறை குர்ஆன் மனிதர்களுக்கு கட்டளையிடுகிறது. ஆகவே மனிதன் உலகத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் மற்றொன்றின் மீது தேவை உடையதாக இருக்கிறது என்ற உண்மையின் அடிப்படையில் படைப்பாளனான அல்லாஹ்(சுபு) இருக்கின்றான் என்ற உறுதியான முடிவுக்கு வருகின்றன. நு}ற்றுக்கணக்கான திருமறை குர்ஆன் வசனங்கள் இந்த கருத்தை வலியுறுத்துகின்றன.சூரா ஆலஇம்ரானில் அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்:
நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியை படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன் 3:190)
சூரா அர்ரூமில் அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்:
வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதையும், உங்களுடைய மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். அகிலத்தாருக்கு இதில் அத்தாட்சிகள் உள்ளன. (குர்ஆன் 30:22)சூரா அல்காஷியாவில் அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்:ஒட்டகத்தை அது எவ்வாறு படைக்கபட்டிருக்கின்றது என்பதையும், வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கின்றது என்பதையும், மலைகளை அது எவ்வாறு நாட்டப்பட்டிருக்கின்றது என்பதையும், ப10மியை அது எவ்வாறு விரிக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் அவர்கள் கவனிக்க மாட்டார்களா? (குர்ஆன் 89: 17-20)
சூரா அத்தாரிக்கில் அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்:
ஆகவே, மனிதன் தான் எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதை கவனிக்கட்டும். குதித்து வெளியாகும் நீரிலிருந்து அவன் படைக்கபட்டான். அது முதுகந்தண்டிற்கும் நெஞ்செலும்புகளுக்கும் இடையில் வெளிப்படுகிறது. (குர்ஆன் 86:5-7)
சூரா அல்பக்ராவில் அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்:
நிச்சயமாக வானங்களையும், ப10மியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் மனிதர்களுக்கு பயன்தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி வைத்து, அதன் மூலம் ப10மியை அது இறந்தபின் உயிர்பிக்க வைப்பதிலும் ஒவ்வொரு விதமான பிராணியை அதில் பரவ விட்டிருப்பதிலும் காற்றுகளை திருப்பி விட்டுக் கொண்டிருப்பதிலும் வானத்திற்கும், ப10மிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மேகத்திலும் சிந்திக்கும் சமூகத்தவர்களுக்கு சான்றுகள் இருக்கின்றன. (குர்ஆன் 2:164)
இன்னும் இதுபோன்ற அனேக இறைவனங்கள் மனிதர்கள் தங்களை சூழ இருப்பவைகளைப் பற்றியும் அவற்றோடு தொடர்புடையவைகளைப் பற்றியும் ஆழமாக சிந்தித்து அதன் அடிப்படையில் ஒரு படைப்பாளன் இருக்கிறான் என்பதை பற்றியும் அவன்தான் அனைத்தையும் படைத்துள்ளான் என்பதைப் பற்றியும் அவன்தான் அனைத்தையும் ஒழுங்குப்படுத்தும் நிர்வாகி என்பதைப் பற்றியும் உறுதியான முடிவுக்கு வருவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றான். இவ்வாறாக, பகுத்தறிவு துணை கொண்டு சிந்தித்து தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் அல்லாஹ்(சுபு) மீதுள்ள ஈமான் உறுதியான முறையில் நிர்மாணிக்கப்பட வேண்டும்.
உண்மையில் படைத்தவனைப் பற்றிய நம்பிக்கை ஒவ்வொரு மனிதனிடத்திலும் இயல்பாகவே இருக்கத்தான் செய்கிறது. எனினும், இந்த உள்ளார்ந்த நம்பிக்கை உணர்ச்சிகளின் மூலமாகவே வெளிபடுகிறது. இந்த உணர்ச்சி சரியான முறையில் வழி நடத்தப்படாமல் அப்படியே விட்டுவிடப்பட்டால், பிறகு அது நம்பகமான முடிவுகளையும் நிலையான உறுதிபாட்டையும் ஏற்படுத்தாது. பெரும்பாலும் வெறும் உணர்ச்சிகள் (Emotion - Wijdaan) உண்மையான நம்பிக்கைகளுக்கு பதிலாக கட்டுக்கதைகளையும் ஆதாரமற்ற கற்பனை கருத்துக்களையும் மனிதனுக்குள் கொண்டு வந்துவிடும். இத்தகைய ஆதாரமற்ற விஷயங்கள் மீது மனிதன் வைக்கும் நம்பிக்கை அவனை சரியான நம்பிக்கையை நோக்கி இட்டுச் செல்லாமல் வழிகேட்டில் ஆக்கிவிடும். மேலும் நிராகரிப்பின் பாலும் அவனை வீழ்த்திவிடும். நம்பிக்கையை உணர்ச்சிகள் ஆதிக்கம் செலுத்துவதின் காரணத்தினால்தான் மனிதர்கள் சிலை வணக்கங்கள், மூட நம்பிக்கைகள், புராணக் கதைகள் ஆகிய தவறான வழிபாட்டு முறைகளின் பிணைக் கைதிகளாக காட்சியளிக்கிறார்கள். ஆகவே இத்தகைய உணர்ச்சிப10ர்வமான குருட்டு நம்பிக்கை, கற்சிலைகளுக்கு தெய்வீக பண்புக் கூறுகளை கற்பிப்பது, அல்லாஹ்(சுபு) பூமியில் அவதரிக்கிறான் என்று நம்புவது, படைப்பினங்களுக்குள்ள பண்புக்கூறுகளை அல்லாஹ்(சுபு)வுக்கு கற்பிப்பது, படைக்கப்பட்ட பொருட்களை ஆராதனை செய்வது மற்றும் அவற்றை வணங்கி வழிபடுவதின் மூலம் அல்லாஹ்(சுபு)வை நெருங்கி விடுவதற்கு சாத்தியம் இருக்கிறது என்று நம்புவது போன்ற இறைநிராகரிப்பின் பக்கமும் இணை வைக்கும் கொடிய செயலின் பக்கமும் மனிதர்களை இட்டுச் சென்று விடும் என்பதால், நம்பிக்கை கொள்வதற்கு ஒரே வழியாக உணர்ச்சிகளை மட்டும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. இது போன்ற குருட்டு நம்பிக்கைகள், கற்பனை எண்ணங்கள் ஆகியவற்றை உண்மையான ஈமான் விட்டொழித்து விடுகிறது. இதன் காரணமாகத்தான் ஈமான் கொள்வதற்கு உணர்ச்சியுடன் அறிவைப் பயன்படுத்துவதற்கு இஸ்லாம் வற்புறுத்துகிறது. மேலும் முஸ்லிம்களை அல்லாஹ்(சுபு)வின் மீது நம்பிக்கை கொள்வதற்கு அறிவை பயன்படுத்தி சிந்தனை மேற்கொள்ளுமாறு கட்டளையிடுகிறது. இன்னும் அகீதாவில் பின்பற்றுதலை (தக்லீது) மேற்கொள்வதற்கு தடை செய்துள்ளது. ஆகவே அல்லாஹ்(சுபு)வின் மீது ஈமான் கொள்வதை தீர்மானிக்கும் நீதிபதியாக இஸ்லாம் பகுத்தறிவை குறிப்பிடுகிறது. அகீதாவில் தக்லீதை தடை செய்கிறது.அல்லாஹ்(சுபு) கூறுகின்றான்:
வானங்களையும், ப10மியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருகதிலும் அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. (குர்ஆன் 3:190)
இங்ஙனம், பகுத்தறிவை முழுமையான நீதிபதியாக்கி, ஆழமாக சிந்தனை மேற்கொண்டு, தீவிரமாக ஆய்வுசெய்து பிறகு அதன் அடிப்படையில் அல்லாஹ்(சுபு) மீது ஈமான் கொள்ள வேண்டியது முஸ்லிம்களுக்கு கடமையாக (Waajib) ஆக்கபட்டிருக்கிறது. பல்வேறு திருமறை அத்தியாயங்களின் நு}ற்றுக்கணக்கான இறை வசனங்களில், பிரபஞ்சத்தை ஆழ்ந்து நோக்கி அதில் நிகழ்கின்ற நிகழ்வுகளின் விதிமுறைகளை ஆய்வு செய்யும்படி மனிதர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. மேலும் இந்த வசனங்கள் மனிதனின் அறிவாற்றல் திறனை பயன்படுத்தி ஆழ்ந்து சிந்திக்கவும் தீவிரமான சிந்தனை மேற்கொள்ளவும் அவனுடைய நம்பிக்கைக்கு அடிப்படையாக பகுத்தறிவும் தெளிவான ஆதாரங்களும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. மேலும் தம் சொந்த அறிவைக் கொண்டு தீர்மானிக்காமல், அதைப்பற்றி நுட்பமாக ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் மேற்கொள்ளாமல் தமது மூதாதையர்கள் செய்த செயல்களை மேற்கொள்வது குறித்து இந்த வசனங்கள் மனிதர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றன. இதுதான் இஸ்லாம் அழைப்பு விடுக்கும் ஈமான் என்கின்ற நம்பிக்கை கொள்ளும் வழிமுறையாகும். இது நிச்சயமாக முன்சென்ற அறியாமை காலத்து மக்களின் வழிகேடான மார்க்கம் அல்ல. இது ஞானமும் உறுதியாகவும் முழுமையாகவும் நம்பிக்கை கொண்டவர்களின் மார்க்கமாகும். இவர்கள் தீவிரமாக தேடுதல் மேற்கொண்டும், ஆழமாக சிந்தனை மேற்கொண்டும் அதன் அடிப்படையில் ஏற்பட்ட தெளிவான சிந்தனையின் மூலமாக அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை (Existence) மீது உறுதியான முறையில் ஈமான் கொண்டவர்கள்.
பகுத்தறிவை பயன்படுத்தி சரியான நம்பிக்கைக்கு வருவதற்கு கட்டளையிடப்பட்டிருந்த போதிலும் தன் அறிவாற்றலின் எல்லைக்கும் புலன் அறிவின் எல்லைக்கும் அப்பாற்பட்டவைகளை மனிதனால் அறிந்து கொள்ள இயலாது. இது ஏனெனில், மனிதனின் அறிவாற்றல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டிருக்கிறது. அது எவ்வளவு வளர்ச்சி அடைந்த போதிலும் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருந்த போதிலும் நிர்ணயிக்கப்பட்ட அதன் எல்லையைக் கடக்க ஒரு போதும் அதனால் இயலாது. ஆகவே அதன் அறிந்து கொள்ளும் திறன் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதாகும். இதன் காரணமாக அல்லாஹ்(சுபு)வின் எதார்த்த நிலையை (Essence of Allah) அறிந்து கொள்ளும் திறன் மனித அறிவுக்கு கிடையாது. ஏனெனில் அல்லாஹ்(சுபு) மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றின் எல்லைக்கு அப்பால் இருக்கிறான். மேலும், தன் அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட ஒன்றை அவனால் அறிந்து கொள்ள இயலாது. இவ்வாறாக, மனித அறிவுக்கு (Human Mind) அல்லாஹ்(சுபு)வின் எதார்த்த நிலையை அறிந்து கொள்ளும் திறன் இல்லை என்பது இங்கு தெளிவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது. அல்லாஹ்(சுபு) வின் எதார்த்த நிலையை அறிந்து கொள்ள முடியாத மனிதனால் எவ்வாறு தனது அறிவை பயன்படுத்தி அவனை நம்பிக்கை கொள்ள முடியும் என்ற கேள்வி இங்கு முற்றிலும் பொருந்தாது. ஏனெனில் ஈமான் என்பது அல்லாஹ்(சுபு)வின் உள்ளமை பற்றிய நம்பிக்கையோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அல்லாஹ்(சுபு)வின் உள்ளமையை அவனுடைய படைப்புகளான மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றின் மூலமாகவும் அவற்றில் விரவிக் கிடக்கின்ற அத்தாட்சிகள் மூலமாகவும் நாம் அறிந்து கொள்ளலாம். இந்த படைப்புகளும் அதில் காணப்படுகின்ற அத்தாட்சிகளும் மனித அறிவு அறிந்து கொள்ளும் எல்லைக்குள் தான் இருக்கின்றன என்பதால் மனிதன் அவற்றை ஆராய்வதன் மூலம் அல்லாஹ்(சுபு) ஆகிய தனது படைப்பாளனை அறிந்து கொள்கிறான். ஆகவே அல்லாஹ்(சுபு)வின் (Existence) உள்ளமை பற்றிய நம்பிக்கை அறிவார்ந்ததும் மனிதனின் அறிவாற்றலின் எல்லைக்கு உட்பட்டதுமாகும். அல்லாஹ்(சுபு)வின் எதார்த்த நிலையை மனிதன் அறிந்து கொள்வது என்பது ஒருபோதும் இயலாத ஒன்றாகும். ஏனெனில் அவன்(சுபு) மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் ஆகியவற்றிற்கு அப்பால் இருக்கிறான். ஆகவே அல்லாஹ்(சுபு) மனிதனின் அறிவாற்றல் திறனுக்கு அப்பால் இருக்கிறான் என்பது இங்கு தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டிய விஷயமாகும். மனித அறிவு அதன் எல்லைக்கு அப்பால் இருப்பதை அறிந்து கொள்ளும் திறன் அற்றது. ஏனெனில் அதன் எல்லை வரையறைக்கு உட்பட்டது. மனித அறிவின் வரையறைக்கு உட்பட்ட இந்த தன்மை ஈமானை அதிகப்படுத்தும் காரணியாக இருக்கிறதே தவிர ஈமானில் குறையையும் ஐயப்படையும் ஏற்படுத்தக் கூடியதாக இல்லை. மேலும் அல்லாஹ்(சுபு)வின் மீதுள்ள ஈமானை அறிவின் மூலமாக நாம் அடைந்து இருப்பதால் முழுமையாக நாம் அவனது(சுபு) உள்ளமையை அறிந்தவர்களாக இருக்கிறோம். அல்லாஹ்(சுபு) உள்ளமை பற்றிய நமது புலன் அறிவு நமது பகுத்தறிவோடு இணைந்து இருப்பதால் அவன்(சுபு) உள்ளமைப் பற்றிய நமது புலன் உணர்வு (Sensation) முற்றிலும் நிச்சயமான ஒன்றே. எனவே மேற்குறிப்பிட்ட விஷயம் படைப்பாளனைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ளுதலையும் அவனுடைய (சுபு) தெய்வீக பண்புகள் குறித்து உறுதியான நம்பிக்கையையும் நமக்குள் கொண்டு வருகிறது. இவை எல்லாம் அல்லாஹ்(சுபு)வின் எதார்த்த நிலையை அறிந்து கொள்ளும் ஆற்றல் நமது அறிவுக்கு இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ளும்படி செய்கின்றன. அதே வேளையில், நாம் அவன்(சுபு) மீது மிக உறுதியான ஈமான் கொண்டவர்களாக இருக்கிறோம். நமது அறிவின் வரையறைக்கு உட்பட்ட தன்மையையும் அல்லாஹ்(சுபு)வின் எதார்த்த நிலையை அறிந்து கொள்ளும் ஆற்றல் அதற்கு இல்லை என்று நமக்கு அவன்(சுபு) அறிவித்து கொடுத்ததையும் நாம் முற்றிலும் ஏற்றுக் கொண்டு அதற்கு உடன்பட்டவர்களாக இருக்கின்றோம். இது இயல்பாகவே மனித அறிவின் பலவீனமான தன்மையாகும். ஒப்பு நோக்கி அறிந்து கொள்ளும் வரையறைக்கு உட்பட்ட பாங்கிலேயே அது அமைக்கப்பட்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் எல்லைக்கு அப்பால் உள்ளதை அறிந்து கொள்ள வேண்டுமாயின் அதற்கு எல்லையற்ற அறிவுத்திறன் தேவைபடுகிறது. இத்தகைய அறிவை மனிதன் பெற்றிருக்கவுமில்லை, பெற்றுக் கொள்ளவும் அவனால் முடியாது.
தொடரும்...

No comments:

Post a Comment